யாழில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இரகசிய தகவல்களை கேட்கும் பொலிஸார்

206 0

அதிக வன்முறை சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் இரகசிய தகவல்களை தொலைபேசி ஊடாகவும் மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் நேரடியாகவும் தெரிவிக்குமாறு, வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் றொசான் பெர்ணான்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இன்று (18) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் ஓரளவிற்கு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஆவா குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று (17) யாழ்ப்பாணம், கோப்பாய் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களிற்கு உட்பட்ட பிரதேசங்களில், பொலிஸாரின் அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் 5 ஆயிரம் பொது மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மக்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறான வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்த பொது மக்கள் எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்பட்டால், வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த முடியும்.

அதேநேரம், மானிப்பாய் மற்றும் வட்டுக்கோட்டைப் பகுதியில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், துண்டுப்பிரசுரம், விநியோகம் செய்யப்படவுள்ளன.

எனவே, குறிப்பிட்ட பொலிஸ் நிலையப் பகுதிகளில் இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள், மற்றும் ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்த தகவல் அறிந்த பொது மக்கள் தொலைபேசி மூலமும், வட மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் முகவரிக்கும் தனிப்பட்ட முறையில், தகவல் தெரிவிக்குமாறும் கூறினார்.

இரகசியமாக தகவல்களை வழங்கினால், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த இலகுவாக இருக்குமென்றும், இவ்வாறான தகவல்களை தந்துதவுமாறும் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a comment