`ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது!’ – வாஜ்பாய் மறைவுக்கு கண்ணீர் வடிக்கும் வைகோ!

215 0

ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளி மறைந்தது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், “இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாப் புகழ் படைத்த ஈடு இணையற்ற ஜனநாயகப் பேரொளியும் கோடானு கோடி மக்களின் இதயத்தில் இடம்பெற்றவருமான அடல்பிகாரி வாஜ்பாய் மறைந்தார் என்ற செய்தி பேரிடியாய் என்னைத் தாக்கியது. நிலைகுலைந்தேன். நாற்பது ஆண்டுகளாக அவரிடம் நெருங்கிப் பழகி, என் தகுதிக்கு மீறிய அன்பை அவரிடமிருந்து பெற்றவன் நான். இந்தியிலும், ஆங்கிலத்திலும் அற்புதமாக உரையாற்றக் கூடியவர். ஜனசங்கத்தைக் கட்டிக் காத்த தலைவர்களில் ஒருவர். தலைசிறந்த கவிஞர், நகைச்சுவை உணர்வு மிக்கவர். வங்கதேச யுத்த வெற்றிக்குப் பின், பிரதமர் இந்திராகாந்தியை நாடாளுமன்றத்தில் “துர்காதேவியே, வெற்றித் தேவைதையே” என வாழ்த்தியவர். இந்தியாவின் அனைத்துத் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். பேரறிஞர் அண்ணா அவர்களிடம் மிக்க அன்பு காட்டியவர். நெருக்கடி நிலை காலத்தில் 18 மாதம் பெங்களூர் சிறையில் வாடினார்.

1998, 1999 லிருந்து 2004 வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு தலைமையேற்றபோது, அக்கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் மதித்து அரவணைத்து கருத்துகளைப் பரிமாறி, ஒரு கூட்டணி ஆட்சி எப்படி இயங்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்தார். தன் வாழ்வையே நாட்டுக்காக, கோடானு கோடி மக்களுக்காக அர்ப்பணித்து, தனக்கென்று ஒரு இல்லற வாழ்வை அமைத்துக்கொள்ளாத உத்தமத் தியாகி. அவர் பிரதமராக இருந்தபோது, ஈழத்தமிழர்களுக்கு செய்த பல உதவிகளை நான் நன்கு அறிவேன். ஆண்டன் பாலசிங்கத்தை இந்தியாவுக்கு வரவழைத்து சிகிச்சை தருவதற்கும் தயாரானார். அந்தச் செய்தியை நான் சேர்ப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பாலசிங்கம் கிளிநொச்சியை விட்டு சிங்கப்பூர் சென்றுவிட்டார்.

அவருடைய முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் டெல்லியில் அவர் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி என் மகள் கண்ணகியின் திருமண வரவேற்பாகும். இந்தியா ஒரு அணு ஆயுத வல்லரசு என்பதை பொக்ரான் சோதனையின் மூலம் உலகத்துக்கு நிரூபித்தார். இந்தியாவின் சாலை கட்டமைப்பை வலுப்படுத்த நாடு முழுக்க தங்க நாற்கரச் சாலைக்கு காரணமானார். “வைகோவை என் மகனாகவே கருதுகிறேன்” என்று கூறுகிற அளவுக்கு அம்மாமனிதரின் உள்ளத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்தது என் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும்.

இந்திய அரசியலில் பேரொளியாய் பிரகாசித்த ஜனநாயச் சுடர் அனைந்துவிட்டது; துக்கம் தாங்கமுடியாமல் தவிக்கிறேன். துயர் சூழ்ந்துள்ள வேளையில் தலைவர் அடல்ஜி அவர்களின் வளர்ப்பு மகள் நமிதா அவர்களுக்கும், அவரது கணவர் ரஞ்சன் பட்டாச்சார்யா அவர்களுக்கும், அவர்களின் புதல்விக்கும், உற்றார் உறவினர்களுக்கும், பாரதிய ஜனதா கட்சி நண்பர்களுக்கும், அத்தலைவரை மதித்து நேசித்த கோடானு கோடி மக்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a comment