மக்களின் பிரதிநிதிகளே மாகாணங்களை ஆளவேண்டும்-முதல்வர் விக்கி

356 0

c-v-vikki_மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கட் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும்.நிர்வாகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், இந்தியாவைப் போலவே இங்கும் ஆளுநர்கள் ஆளுநர்களாகவே இருக்க வேண்டும் என்றும், அவர்கள் ஆள்பவர்களாக மாறிவிடக்கூடாது என்றும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்மாவட்டச் செயலகத்தில் 4 மாடிகளைக் கொண்ட புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதித் திறப்பு விழாவும், நினைவுக்கல் திரை நீக்கமும் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அதிகாரப் பரவலாக்கல் ஆரோக்கியமாக நடைபெறும் என்று தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில், பல்நிர்வாக அலகுகளை நீக்கி ஒற்றுமைப்பட்ட ஒரே மாகாண நிர்வாகம் நடைபெற பிரதமர் வழிவகுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மாகாணங்களைப் பரிபாலிக்கும் பொறுப்பு, நிர்வகிக்கும் அதிகாரம், மாகாண மக்கட் பிரதிநிதிகளுக்கே வழங்க வேண்டும். ஆளுநருக்கு ஒரு அதிகார அலகு, மாவட்ட செயலாளர்களுக்கு ஒரு அலகு, எமக்கு இன்னொரு அலகு என்றிருந்தால் மாகாணம் உருப்படாமல் போய்விடும் என்றும், முரண்பாடுகளே மிஞ்சும் என்றும் வடக்கு முதல்வர் குறிப்பிட்டார்.