அமெரிக்க தேர்தலில் ஆதிக்கம் செலுத்த சதி? 32 பேஸ்புக் கணக்குகள் முடக்கம்

307 0

அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதியும், இங்கிலாந்தில் 2017-ம் ஆண்டு ஜூன் 8-ந் தேதியும் நடந்த தேர்தல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பிரபல சமூக வலைத்தளமான ‘பேஸ்புக்’கில் இருந்து, அதன் கோடிக்கணக்கான உபயோகிப்பாளர்களின் தகவல்கள், கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனத்தால் திருடப்பட்டதாக புகார்கள் எழுந்தன.

அதை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டார். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும், பாதுகாப்பு அம்சங்கள் வலுப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார்.

இந்த நிலையில், அமெரிக்காவில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் மொத்த இடங்களான 435 இடங்களுக்கும், செனட் சபையின் 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வரும் நவம்பர் மாதம் 6-ந் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவில் சதி செய்து ‘பேஸ்புக்’கில் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளதாக சந்தேகங்கள் எழுந்து உள்ளன.

அந்த வகையில் சந்தேகத்துக்கு இடமான 32 கணக்குகளையும், பக்கங்களையும் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் முடக்கி உள்ளது. அதே நேரத்தில் இந்த கணக்குகள் தொடங்கப்பட்டதின் பின்னணியில் எந்தக் குழுவினர் உள்ளனர் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான முதல் கட்ட விசாரணை தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த கணக்குகளை உருவாக்கியவர்கள் மறைந்து கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த கணக்குகள் அஜ்ட்லான் வாரியர்ஸ், பிளாக் எலிவேசன், மைன்ட்புல் பீயிங், ரெசிஸ்டர்ஸ் போன்ற பெயர்களில் தொடங்கப்பட்டு இருந்தனவாம். ஒரு கணக்கை மட்டுமே 2 லட்சத்து 90 ஆயிரம் பேர் தொடர்ந்து வந்து உள்ளதாகவும் தெரிய வந்து உள்ளது.

Leave a comment