தற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் – ஈரான்

3823 0

ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால் ஏற்பட்டுள்ள தற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா, தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

இதனால், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீப காலமாக வார்த்தைப் போர் அதிகரித்து ஒருவித மோதல் போக்கு உருவாகியுள்ளது.

இதற்கிடையே, ஈரான் அதிபர் ஹஸன் ரவுகானியுடன் எவ்வித முன்நிபந்தனைகளும் இல்லாமல் அமைதி பேச்சுக்கு தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா வந்துள்ள இத்தாலி பிரதமர் கியுசெப்பு கோன்ட்டேவுடன் வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது, ஈரான் அதிபர் ரவுகானியை சந்திக்கும் எண்ணம் உள்ளதா? என்னும் கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், நான் சந்திப்புகளில் நம்பிக்கை கொண்டவன். ஈரான் அதிபர் என்னை சந்திக்க விரும்பினால் நான் நிச்சயமாக சந்திப்பேன்.

இதற்கு ஈரான் தயாரா? என்பது எனக்கு தெரியவில்லை. அணு ஒப்பந்தத்தில் இருந்து நான் விலகியதும் அவர்கள் மிகவும் சிக்கலான நிலையில் உள்ளனர். எனவே, அவர்கள் சந்திப்புக்கு முன்வருவார்கள் என நான் நம்புகிறேன். அவர்கள் எப்போது விரும்பினாலும் நான் சந்தித்துப் பேச தயாராகவே இருக்கிறேன்.

இந்நிலையில், ரவுகானியை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ள ட்ரம்பின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி முகமது ஜாவத் ஜரிப், தற்போதைய பிரச்சனைகளுக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

’ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே 2 வருடங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. ஆனால், ஈரானுடனான அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதாலேயே இருநாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.
எனவே, தற்போதைய பிரச்சனைக்கு காரணமான அமெரிக்கா தன்னைத் தானே குற்றம்சாட்டிக்கொள்ள வேண்டும். மிரட்டல்கள் மற்றும் பொருளாதார தடைகள் வேலைக்கு ஆகாது. எனவே, மதிக்க முயற்சி செய்யுங்கள்’ என முகமது ஜாவத் ஜரிப் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும், அமெரிக்கா நம்பிக்கைக்குறிய நாடு அல்ல. அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக விலகிய அந்த நாட்டை எப்படி நம்ப முடியும்?.
அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகளில் போது ஏற்கனவே ஏற்பட்ட மோசமான அனுபவங்களின் அடிப்படையில் பார்க்கும் போது டொனால்ட் ரவுகானியை சந்திக்க விரும்புவதாக கூறியுள்ள கருத்தால் எந்த பயனும் ஏற்பட போவதில்லை என ஈரான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment