தேசிய பிரச்சினை நாம் நினைக்கும் அளவுக்கு பயங்கரமானது அல்ல. நினைக்கும் அளவுக்கும் பூதம் கறுப்பல்ல. அதனை விளங்கிக்கொள்ள வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் “தெரிந்தால் கற்பியுங்கள் தெரியாவிட்டால் கற்றுக்கொள்ளுங்கள்”” என்ற 2017 ஆம் ஆண்டுக்கான வானொலி நிகழ்ச்சியின் சிறப்பு பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவ,மாணவியரை பாராட்டும் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் தமிழும் சிங்களமும் தேசிய மொழிகளாகும். தேசிய இனப்பிரச்சினை தீர்வுக்கு அதிகாரத்தை பகிரக் கூடிய அரசியலமைப்பு அவசியமாகும். அது கட்டாயம் அவசியமாகும். அதில் மாற்று கருத்துக்கு இடம் கிடையாது. ஆகவே புதிய அரசியலமைப்பு வரும். எனினும் நாம் எதிர்பார்க்கும் வேகத்தில் வராது. அனைவரும் இணக்கத்துடன் புதிய அரசியலமைப்பினை கொண்டு வர வேண்டியுள்ளது. அதுவே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.
ஆகவே அரசியலமைப்பு வரும் வரை பார்த்திருக்காமல் மொழி ரீதியாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க தீர்மானித்தேன்.
மரத்திற்கு குருவி வரும் வரை பார்த்திருக்காமல் கையிலிருக்கும் குருவியான தற்போதைய அரசியலமைப்பில் உள்ள மொழி சம்பந்தமான சட்டத்தை பயன்படுத்தி மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளேன். மொழியின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண முடியும்.
நாம் நினைப்பது போன்று தேசிய பிரச்சினை பயங்கரமானது அல்ல. பயங்கர பூதம் அல்ல. நாம் நினைக்கும் அளவுக்கு பூதம் கறுப்பல்ல. அதனை விளங்கிக்கொள்ள வேண்டும். தேசிய பிரச்சினையில் பிரதான பங்காக மொழிப் பிரச்சினையை கண்டுகொள்ள முடியும். மொழி பிரச்சினை தீர்க்கப்பட்டால் தேசிய பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும். மொழி அறிவின் ஊடாக மூவின மக்களும் ஏனைய இனங்களை புரிந்துக்கொண்டால் எந்த பிரச்சினையும் ஏற்படாது.
மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பெரும் பற்றாக்குறை நிலவுகின்றது. இதன்காரணமாகவே வானொலி தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த பாடநெறி ஆரம்பிக்கப்பட்டது. ஆகவே இந்த பாடநெறியை எதிர்வரும் காலங்களில் தொலைக் காட்சியில் காணொளி மூலமாக ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்போது ஆர்வம் மாணவர்கள் மத்தியில் இன்னும் அதிகரிப்பதுடன் அதிகளவிலான மாணவர் களின் பங்களிப்பு கிடைக்கும்.
தற்போது இளைஞர்கள் எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்கும் போது மும்மொழியை தேசிய மொழியாககொண்ட நாடாக மாறும் என நம்புகின்றேன்.