காசி விஸ்வநாதர் கோயிலுக்கு 239 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்… தமிழரின் முயற்சி!

629 0

காசியை நினைக்க முத்தி; காசியென்றுரைக்க முத்தி 
காசியைக் காண முத்தி;  காசியைச் சூழ முத்தி
காசியில் வசிக்க முத்தி; காசியைக் கேட்க முத்தி
காசியில் வசிப்போர் தம்மைக் கண்டுதாழ்ந் திடுதின் முத்தி...

என்று காசி நகரத்தின் சிறப்புகளை விவரிக்கிறது ‘காசி ரகசியம்’ என்னும் நூல்.

காசி விஸ்வநாதர்

முக்தி தரும் நகரங்களில் ஏழில் காசி நகரமும் ஒன்று. ஒவ்வோர் இந்துவும் அவசியம் சென்று தரிசிக்க வேண்டும் என்று விரும்பும் தலம் காசி. இந்தியாவில் அமைந்திருக்கும் பன்னிரண்டு ஜோதிர்லிங்கத் தலங்களில் காசியும் ஒன்று.

வருணை மற்றும் அசி ஆகிய நதிகள் கங்கையில் சங்கமிக்கும் இடம் என்பதால், வாரணாசி என்ற பெயரும் காசிக்கு உண்டு. உலகின் மிகப்  பழைமையான நகரங்களுள் காசியும் ஒன்று. சுமார் 23,000 கோயில்களைக்கொண்டிருக்கும் புண்ணிய பூமி காசி. ஆகாயத்திலிருந்து மின்னல் ஒளிபட்டதால், இந்த நகரத்துக்கு `காசி’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. ‘காசி’ என்றால், ஒளி மிகுந்த நகரம் என்று பொருள்.

யாகம்

பல்வேறு சிறப்புகளைக்கொண்ட காசி விஸ்வநாதர் ஆலயம், அம்மனின் சக்தி பீடங்களில் ஒன்று. இங்கு அம்மன், `விசாலாட்சி’ எனும் பெயரில் அருள்புரிகிறாள்.  மற்ற தலங்களில் இல்லாத வகையில் சிவபெருமான் இங்கு மகிழ்ச்சிப் பெருக்குடன் அருள்புரிவதால், ‘ஆனந்த பவனம்’ என்றும் இந்த ஊரைக் குறிப்பிடுகிறார்கள்.

காசியில் கங்கை நதி தெற்கிலிருந்து வடக்கு நோக்கி உத்தரவாகிணியாகப் பயணிக்கிறது. கங்கை எந்தத் திசையிலிருந்து வந்ததோ, அந்த வட திசையில் அருள்புரியும் சிவபெருமானை நோக்கிப் பாயும் காசி கங்கை நதியில் நீராடினால், அனைத்துப் பாவங்களும் விலகி முக்தி பெறலாம் என்பது ஐதீகம்.

விஸ்வநாதர்

இந்த ஊர், ‘மகாமயானம் என்றும் அழைக்கப்படுகிறது. காசியில் உயிர்விடும் அனைவருக்கும் முக்தி கிடைக்கும் என்பது பரவலான நம்பிக்கை. இந்த நகரில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் உயிர்விட்டாலும் சிவபெருமான் முக்திப் பேறு அளிப்பார் என்பதும் ஐதீகம்.

காசி விஸ்வநாதர் கோயில் பலமுறை படையெடுப்புகளால் தகர்க்கப்பட்டிருக்கிறது. மூன்று முறை இடிக்கப்பட்ட கோயில் காசி விஸ்வநாதர் கோயில். எத்தனை முறை இடித்தால்தான் என்ன, விஸ்வநாதரின் கருணைத் திறத்தின் காரணமாக மறுபடி மறுபடி புதுப் பொலிவுடன் ஆலயம் நிர்மானிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை மறுபடியும் புதுப் பொலிவுடன் எழுப்பியவர் முகலாயப் பேரரசர் அக்பர் என்பது ஆச்சர்யமளிக்கும் உண்மை. கி.பி1585-ம் வருடம், அக்பரின் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த தோடர்மால் என்பவரின் உதவியுடன் நாராயண பட் என்பவர்தான், ஷகி கஜானா நிதியிலிருந்து காசி விஸ்வநாதர் கோயிலைக் கட்டினார். ஆனால் 1669-ம் வருடம், ஔரங்கசீப் பீரங்கி மூலம் கோயிலைத் தகர்த்துவிட்டு, ஞான பாபி என்னும் மசூதியையும் கட்டினார். அதன் பிறகு 1779-ம் வருடம், இந்தூர் மகாராணி அகல்யா பாய் ஹோல்கர் என்பவர் ஞான பாபி மசூதிக்கு அருகில் இப்போது இருக்கும் காசி விஸ்வநாதர் கோயிலை எழுப்பினார். அதன் பிறகு, 239 வருடங்கள் கடந்த நிலையில், இப்போதுதான் கடந்த ஜூலை மாதம் 5-ம் தேதி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

குடமுழுக்கு

239 வருடங்கள் கழித்து நடைபெற்றிருக்கும் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்தியவர், தமிழகத்தைச் சேர்ந்த சுப்பு சுந்தரம் செட்டியார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேகப் பணிகுறித்துப் பேசினோம்…

“காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த எனக்குக் கிடைத்த வாய்ப்பை இறைவனின் அருள் கடாட்சம் என்றே நானும் என் மனைவியும் கருதுகிறோம். நாங்கள் காசிக்குச் சென்றது, காசி அன்னபூரணியை வழிபடுவதற்காகத்தான். அன்னபூரணியை வழிபட்டுவிட்டு காசி விஸ்வநாதரைத் தரிசனம் செய்தோம். காசி விஸ்வநாதர் சந்நிதி கதவுகளுக்கு வெள்ளிக்கவசம் செய்து கொடுத்தோம்.
அப்போதுதான், கோயிலில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இருப்பதும், பக்தர்கள் தொடர்ந்து வருவதன் காரணமாக சுத்தமின்றி இருப்பதும் தெரிந்தது. கோயிலில் விசாரித்தபோது, கடந்த 239 வருடங்களாக கும்பாபிஷேகமே நடைபெறவில்லை என்ற விவரம் தெரியவந்தது. அப்போது எனக்குள், ‘காசி விஸ்வநாதர் கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தால் என்ன?’ என்பதாக ஓர் எண்ணம் தோன்றியது. இறைவனின் திருவுள்ளம்தான் அப்படி ஓர் எண்ணம் எனக்குள் ஏற்படக் காரணம் என்பதையும் புரிந்துகொண்டேன். என் எண்ணத்தை கோயில் நிர்வாகிகளிடம் தெரிவித்தேன். அவர்களும் ஒப்புக்கொண்டனர். உடனே கோயிலில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, தமிழகத்திலிருந்து 60 வேத பண்டிதர்களை பிள்ளையார்பட்டி பிச்சைக் குருக்கள் தலைமையில் அழைத்துச்சென்று கும்பாபிஷேகத்தைச் செய்தோம். காசி விஸ்வநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்த பணியை பிறவிப் பயனாகவே கருதுகிறோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Leave a comment