எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு – பரபரப்பான சூழலில் இன்று விசாரணையை தொடங்குகிறார் மூன்றாவது நீதிபதி

457 0

தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில், மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விசாரணை நடத்த உள்ளார்.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு கூறியதால் 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரை சுப்ரீம் கோர்ட்டு மாற்றிவிட்டு சத்யநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்தது.
புதிய நீதிபதி சத்ய நாராயணன் கடந்த 4-ம் தேதி விசாரணையை தொடங்கினார். முதலில் இரு தரப்பு வழக்கறிஞர்களையும் அழைத்து விசாரணையை நடத்துவது குறித்து ஆலோசித்தார். இந்த வழக்கை எப்போது தொடங்கி நடத்துவது என்பது குறித்து வழக்கறிஞர்களின் கருத்தை கேட்டறிந்தார்.
அதன்பின்னர், வழக்கு விசாரணையை வரும் 23-ம்(இன்று) தேதி காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தார். இன்று முதல் வரும் வெள்ளி கிழமை வரை 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும் நீதிபதி சத்தியநாராயணன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு விசாரணையை நீதிபதி சத்தியநாராயணன் இன்று தொடங்குகிறார். அரசு மற்றும் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் சார்பாக ஆஜராகும் வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க உள்ளனர்.
தனது விசாரணையை நீதிபதி ஒரு வாரத்திற்குள் முடிக்கும்பட்சத்தில், அதிலிருந்து ஒரு மாதத்திற்குள் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a comment