கிளிநொச்சியில் பெண் தலைமைத்துவ ஏழை குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்ட பசு மாட்டினை இரவோடு இரவாக திருடிச் சென்று இறைச்சிக்காக வெட்டியுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு ஜெயந்திநகரில் அமைந்துள்ள அவரது தற்காலிக வீட்டு வளவில் கட்டியிருந்த பசுவினை இனந்தெரியாதவர்கள் திருடிச் சென்று ஜெயந்திநகர் மீனாட்சி அம்மன் கோவிலருகில் வைத்து வெட்டி இறைச்சியினை எடுத்துவிட்டு எச்சங்களை விட்டுச்சென்றுள்ளனர்.
மூன்று மாவீரர்களின் சகோதரியும், காணாமல் ஆக்கப்பட்ட முன்னாள் போராளியின் மனைவியும் முன்னாள் போராளியுமான இரண்டு பிள்ளைகளின் தாயாரான பெண்ணுக்கு வழங்கப்பட்ட பசுவினையே இவ்வாறு வெட்டியுள்ளனர்
மிகவும் வறுமை கோட்டிற்குள் வாழ்ந்து வரும் இவருக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று இப் பசுவை வாழ்வாதார உதவியாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட வருகின்றனர்.