மஸ்கெலியா வைத்தியசாலையின் முன் ஆர்ப்பாட்டம்

207 0

மஸ்கெலியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால் இன்று வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக வந்த 300 ற்கும் மேற்பட்ட நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

இதன் காரணமாக வைத்தியர்களை உடனடியாக நியமிக்குமாறு கோரியும் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு கோரியும், சுமார் 300 ற்கும் மேற்பட்ட மக்களும், மஸ்கெலியா பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் வைத்தியசாலைக்கு முன்பு சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்படனர்.

மஸ்கெலியா பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பதாதைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெற வந்த நோயாளர்களும், பிரதேச மக்களும் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில் வைத்தியசாலையில் வைத்தியர்கள் இல்லாமல் நோயாளர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், சிகிச்சைக்கென வந்தவர்களும், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றவர்களும் 17ஆம் திகதி மாலை வெளியேற்றப்பட்டனர்.

இதனால் சிகிச்சை பெற்ற நோயாளர்கள் உட்பட வெளி நோயாளர்களும் சிரமங்களுக்கு மத்தியில் வீடு திரும்ப வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டதோடு, மிக மோசமான நிலையில் இருந்த நோயளர்களை கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் வைத்திய வட்டாரங்கள் தெரிவித்தன.

எனவே நாட்டின் ஜனாதிபதியும், சுகாதார அமைச்சரும், மத்திய மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் இதற்கு உடனடியாக தீர்வினை பெற்றுத் தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a comment