எனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை -பொன்சேகா

454 0

பாதாளஉலக குழுக்களை சேர்ந்தவர்களிற்கு தஞ்சமளிப்பதாக தன்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுதளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா நிராகரித்துள்ளார்.

தனது பெயருக்கு களங்கத்தையும் தனக்கு நெருக்கடியையும் ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இதுவென அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் தேடப்படும் குற்றவாளிகள் ஐவருக்கு அமைச்சர் ஒருவர் மெய்ப்பாதுகாவலர் வேலையை வழங்கியுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன, எனகுறிப்பிட்டுள்ள சரத்பொன்சேகா ஓரு ஊடகம் தன்னுடைய பெயரையும் படத்தையும் பயன்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளது, மற்றைய ஊடகம் எனது பெயரை குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

எனக்கு பாதாளஉலகத்தவர்களின் பாதுகாப்பு தேவையில்லை அவர்களுக்கும் எனது பாதுகாப்பு தேவையில்லை என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.எனக்கு பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் பாதுகாப்பு வழங்குகின்றனர், என தெரிவித்துள்ள சரத்பொன்சேகா இந்த செய்தியை வெளியிட்டுள்ள பத்திரிகையாளரிற்கு தனிப்பட்ட நிகழ்ச்சிநிரல் இருக்கவேண்டும்,அவர் என்னை முன்னமும் விமர்சித்துள்ளார்,எனது அமைச்சு அவரிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும், அரசியல் சக்தியொன்று அவரின் பின்னால் உள்ளது எனவும் அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Leave a comment