சந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது!

507 0

மானிப்பாய் பகுதியில் வயோதிப பெண்ணை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என பொலிசாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் குற்ற சாட்டில் இருந்து விடுவித்தது.

குறித்த படுகொலை வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ. ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன் போது குறித்த சந்தேக நபர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களால் முற்படுத்தப்பட்டார்.

அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி க. சுகாஸ் சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர். அவருக்கும் இந்தக் கொலைக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. கொலைச் சம்பவ தினத்தன்று கொலையாளி வீட்டுக்குள் நுழைவது, வீட்டிலிருந்து வெளியேறுவது என்பன பாதுகாப்புக் கமராவில் பதிவாகியுள்ளது.

அந்த நபர் இவர் இல்லை என்பது தெட்டத் தெளிவாக அதில் தெரிகிறது.

எனவே சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவிக்கவேண்டும் என நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார்,
பொலிஸாரால் சந்தேகநபருக்கு எதிராக உரிய ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படாத நிலையில் சட்டத்தரணி சுகாஷின் சமர்ப்பணத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்று சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவித்தது.

மானிப்பாய் கல்லூரி ஒழுங்கை என்ற விலாசத்தில் தனித்து வாழும் நாகரத்தினம் குமராசாமி (வயது-88) என்பவரது வீட்டில் வைத்து அவரை பராமரிப்பதற்கு பணிக்கு அமர்த்தப்பட்ட வயோதிபப் பெண் கடந்த மாதம் 28ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

மானிப்பாய், சங்கபிள்ளை வீதியைச் சேர்ந்த தம்பையா லீலாதேவி (வயது -60) என்ற வயோதிப் பெண்ணே கொலை செய்யப்பட்டார்.

கொலையாளி முதலில் யாசகம் கேட்பது போல் வந்த போது . அவருக்கு தர்மம் வழங்கப்பட்டது. சில நிமிடங்களில் மீண்டும் அந்த வீட்டுக்குள் புகுந்து இந்த கொலையைச் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஆனைக்கோட்டைப் பகுதியில் நடமாடிய மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவரை மானிப்பாய் பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment