விடுதலைப்புலிகள் காலத்தில் இருந்த சட்டம்,ஒழுங்கு இப்போது இல்லை!

221 0

“இன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் உட்பட பல்வேறு விதமானவர்கள் மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே முனைப்பாக இருக்கின்றனர்” என வடக்கு சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.
வட மாகாண சுகாதார அமைச்சரின் அலுவலகத்தில் இன்று காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வட பகுதியில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்த நிலையில் காணப்படுகின்றது. கொள்ளை,கொலை, பாலியல் வன்புனர்வு போன்ற பல்வேறு விதமான குற்றச் செயல்கள் தொடர்ந்தும் இடம் பெற்று வருகின்றது. குறித்த குற்றச் செயல்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரினால் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் குறித்த சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத அல்லது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாத நிலையில் இருப்பதன் பின்னனியை பார்க்கும் பொழுது அரசும்,பொலிஸாரும் வேண்டும் என்றே அமைதியாக இருப்பதாக சந்தேகம் எழுகின்றது.

ஆகவே ஒரு நிகழ்ச்சி நிரலினுடைய பின்னனியிலே குறித்த குற்றச் செயல்கள் இடம் பெறுவதாக சந்தேகிக்க பட வேண்டிய நிலை உள்ளது. அண்மையில் கூட ஆறு வயது சிறுமி மற்றும் 60 வயதுடை வயோதிப தாய் ஒருவர் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமும் இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவங்களுக்கு மக்களிடம் இருந்து பல்வேறு எதிர்ப்புக்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன் ஒரு வெளிப்பாடவே அண்மையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூட விடுதலைப்புலிகளின் உருவாக்கம் தொடர்பாக ஒரு கருத்தை தெரிவித்தது பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.
அவருடைய கருத்தின் படி ‘விடுதலைப்புலிகளினுடைய காலத்தில் இருந்த சட்டம்,ஒழுங்கு கூட இப்போது இல்லை’ என்ற தோற்றப்பாட்டை உருவாக்கியுள்ளது.

இதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் உருவாக்கப்பட வேண்டும் என்கின்ற கருத்து எந்த அளவுக்கு பாரதூரமாக மத்திய அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தினால் பூதாகாரமாக எடுத்து பார்க்கப்படுகின்றது என்பதற்கு அப்பால் இவ்வாறான ஒரு மன நிலை அதாவது ‘விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இருந்த சட்டம் ஒழுங்கு விடுதலைப்புலிகளினால் தான் இவற்றை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியும்’ என்ற சிந்தனை முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு ஏற்பட்டிருப்பதை விட அங்குள்ள மக்களின் மனங்களில் இருந்து உருவாக்கப்படுகின்றதா? என்பதனை அரசாங்கம் கவனமாக பார்க்க வேண்டும்.

மக்கள் மனங்களில் இருந்து உருவாக்கப்படுகின்றதே மிகவும் முக்கியமான விடையமாக இருக்க வேண்டும். தனிப்பட்ட ஒரு அரசியல் வாதியின் கூற்று சர்ச்சைக்கூறியதாக இருந்தாலும் மக்கள் கூட இவ்வாறு சிந்திக்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பதினை அரசாங்கம் மிகக் கவனமாக உற்று நோக்க வேண்டும்.

அண்மையில் வடக்கு முதலமைச்சர் கூட எங்களுக்கு அதிகாரத்தையும், பொலிஸ் அதிகாரத்தையும் தாருங்கள் நாங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்துகின்றோம் என தெரிவித்திருந்தார். அது ஒரு நியாயமான கருத்து.

ஆனால் இன்றைய சூழலில் எமது அரசியல் வாதிகள் உட்பட பல்வேறு விதமானவர்கள் வட மாகாண சபையை அல்லது மாகாண சபையினுடைய அதிகாரங்களை குறைப்பதிலேயே குறியாக இருக்கின்றனர்.

நாங்கள் ஏற்கனவே அதிகார பற்றாக்குறை, அதிகாரம் போதாது என்று போரிட்டுக்கொண்டிருக்கும் போது இருக்கின்ற அதிகாரங்கள் கூட மாகாண சபைக்கு இல்லை.

அவற்றை கொடுக்கக்கூடாது என்கின்ற நிலமை தற்போது காணப்படுகின்றமையினை நாங்கள் அவதானிக்கக் கூடியாதாக உள்ளது. இவ்விடயம் எமது தமிழ் சமூகத்திற்கு ஆரோக்கியமானதாக இருக்கும் என நான் கருதவில்லை” என தெரிவித்தார்.

Leave a comment