ஆன்லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்- தனியார் நிறுவனங்களுக்கான டெண்டர் அறிவிப்பு

26985 0

ஆன்-லைன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை நடத்தும் பணிகளை தனியாரிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டு, இதற்காக கம்ப்யூட்டர் நிறுவனங்களிடம் இருந்து டெண்டர் கோரப்பட்டுள்ளது.

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் எழுத்து தேர்வுகளை ஒரு வருடத்துக்கு 50 லட்சம் பேர் எழுதுகின்றனர்.

அரசு துறைகளில் உள்ள 30-க்கும் அதிகமான பிரிவுகளுக்கு இந்த துறை மூலம்தான் தேர்வு நடத்தப்படுகிறது.

டி.என்.பி.எஸ்.சி. மூலம் நடத்தப்படும் தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க, ஆன்-லைன் மூலம் தேர்வுகளை நடத்த இப்போது அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக விருப்பமுள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) கோரப்பட்டுள்ளன.

மாறி வரும் காலத்துக்கு ஏற்ப புதிய நடைமுறையை புகுத்துவது அவசியம் என்றும், பழைய காலம் போல் பேப்பரில் பரீட்சை எழுதி அதை திருத்தி முடிவுகளை அறிவிக்க கால விரயம் ஏற்படுவதால் இந்த புதிய நடைமுறையை செயல்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் பரீட்சை எழுத விரும்புபவர்கள் குறிப்பிட்ட மையத்துக்கு சென்று கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில்தான் பதில்களை அனுப்ப வேண்டும்.

பாஸ்போர்ட் அலுவலகங்களில் பல்வேறு பிரிவுகளை தனியாரிடம் ஒப்படைத்திருப்பது போல் தேர்வு மையங்களில் செய்ய வேண்டிய பணிகளை தனியாரிடம் ஒப்படைத்து ஹால் டிக்கெட்டை சரி பார்ப்பது உள்பட பல்வேறு பணிகளை ஒப்படைக்க உள்ளனர்.

இந்த டெண்டரை அரசு துறை நிறுவனமான எல்காட் எடுத்து நடத்த முன் வருமா? அல்லது தனியார் கம்ப்யூட்டர் கம்பெனிகள் ஏற்று நடத்த முன் வருமா? என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

இதுபற்றி சட்டசபையில் உறுப்பினர்கள் பேசும் போது, “தனியாரிடம் இதை ஒப்படைத்தால் நிறைய தவறுகள் நடக்கும். வினாத்தாள் வெளியாக வாய்ப்பு ஏற்பட்டு விடும். எனவே நன்மைகளை விட அதிக தீமைகள்தான் ஏற்படும்” என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத பயிற்சி கொடுக்கும் ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-

அரசுத் துறையில் வேலையில் சேருவதற்கு பட்டப்படிப்பு படித்திருந்தாலே டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுதலாம். தற்போது இதை ஆன்-லைனில் தேர்வு எழுத சொல்லும்போது கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

ஏனென்றால் நிறைய மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை சரளமாக பயன்படுத்த தெரியாது. இதனால் தடுமாற்றம் அடைவார்கள்.

அதுமட்டுமல்ல. கடந்த 2015-ம் ஆண்டு பரீட்சார்த்த முறையில் உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் தேர்வு எழுத 2 ஆயிரம் பேருக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் திடீரென ‘சர்வர்’ முடங்கியதால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.

மேலும் வினாத்தாள் வெளியாக அதிக வாய்ப்பும் உருவாகும். ஏனென்றால் போட்டித் தேர்வுகளுக்கான வினாத்தாள்களை தயாரித்து வழங்குவது மட்டும்தான் தேர்வாணையத்தின் பணி என்றும் அதை கணினியில் ஏற்றி தேர்வை நடத்துவது வரை அனைத்தும் தேர்வு நடத்துவதற்கான தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனத்தின் பொறுப்பு என்றும் கூறப்பட்டுள்ளது.

தேர்வு அறையின் மேற்பார்வையாளர் கூட தனியார் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவராகத்தான் இருப்பார். தேர்வாணையத்தில் உள்ள பார்வையாளர் ஒருவர் மட்டுமே இருப்பார் என தெரிகிறது. எனவே இத்தகைய சூழலில் கண்டிப்பாக முறைகேடுகள் நடைபெறும்.

முக்கியமாக வினாத்தாள்களை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்வது மிகவும் ரகசியமாக இருக்க வேண்டும். ஆனால் இந்த பணியை செய்வதற்கு 1 நாளைக்கு முன்பே தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும்போது வினாத்தாள் கசிய அதிக வாய்ப்புள்ளது.

பல மாநிலங்களில் ஆன்-லைன் தேர்வுக்கான வினாத்தாள் இப்படித்தான் கசிந்தன.

எனவே தேர்வு நடத்தும் பணியை தனியாரிடம் வழங்காமல் அரசு பணியாளர் தேர்வாணையமே இதற்கான கட்டமைப்பை உருவாக்கினால் தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment