அமெரிக்காவில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் நிர்வாகியாக இந்தியர் நியமனம்!

483 0

அமெரிக்காவில் போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் பொறுப்பு நிர்வாகியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் துணை உதவியாளராகவும் இருந்து வந்தவர் உத்தம் தில்லான் நியமிக்கப்பட்டு உள்ளார்.

வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் துணை வக்கீலாகவும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் துணை உதவியாளராகவும் இருந்து வந்தவர் உத்தம் தில்லான். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.

இவர், போதைப்பொருள் தடுப்பு அமலாக்க அமைப்பின் பொறுப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.இந்தப் பதவியில் இருந்து வந்த ராபர்ட் பேட்டர்சன் என்பவர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, உத்தம் தில்லான் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்று உள்ளார்.

இந்தப் பதவி, அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய பதவி ஆகும்.

உத்தம் தில்லான் நியமனம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ், இதுபற்றி கூறுகையில், “அமெரிக்காவில் போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஒவ்வொரு 9 நிமிடத்திலும் ஒருவர் உயிரிழக்கின்றனர். எனவே நமது வரலாற்றில் போதைப் பொருள் உபயோகத்தால் அதிகபட்ச உயிரிழப்புகளை சந்தித்து வருகிறோம் என்பதில் சந்தேகம் இல்லை” என குறிப்பிட்டார்.

உத்தம் தில்லான், வெள்ளை மாளிகையில் மட்டுமல்லாது, நீதித்துறை, உள்நாட்டு பாதுகாப்புத்துறை, நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றில் பணியாற்றிய நீண்ட அனுபவம் மிக்கவர்.

Leave a comment