ஒரே நாளில் உலகக்கோப்பையை விட்டு வெளியேறிய மெஸ்சி, ரொனால்டோ – சோகத்தில் ரசிகர்கள்

237 0

ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து பிரபல வீரர்களான மெஸ்சி மற்றும் ரொனால்டோவின் அணிகள் ஒரே நாளில் வெளியேற்றப்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. 32 அணிகள் கலந்துகொண்ட இத்தொடரின் லீக் சுற்றின் முடிவில் 16 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றன.
நேற்று நடைபெற்ற முதல் நாக்-அவுட் போட்டியில் பிரான்ஸ், லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜெண்டினா அணியை வீழ்த்தியது. இரண்டாவது நாக்-அவுட் போட்டியில் உருகுவே, கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையினான போர்ச்சுகல் அணியை வீழ்த்தியது.
உலக அளவில் அதிக ரசிகர்கள் கொண்ட வீரர்கள் என்றால் அது மெஸ்சி மற்றும் ரொனால்டோவாக தான் இருக்க முடியும். இவர்கள் இருவருமே கடந்த சில ஆண்டுகளாக உலகின் சிறந்த கால்பந்து வீரர் என்ற பட்டத்தை மாறி மாறி கைப்பற்றி வருகின்றனர்.
அவர்கள் அணிகள் நாக்-அவுட் சுற்றில் வெற்றி பெற்றால் நேருக்கு நேர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மெஸ்சி மற்றும் ரொனால்டோவின் அணிகள் ஒரே நாளில் தோல்வியடைந்து உலகக்கோப்பை கால்பந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளன. இதனால் இரு வீரர்களின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.
இது அவர்கள் இருவரின் ரசிகர்கள் மற்றும் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகக்கோப்பை தான் இருவர் விளையாடும் கடைசி உலகக்கோப்பையாக இருக்கும் என கூறப்படுகிறது.

Leave a comment