ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஜக்கிவாசுதேவ் கருத்து- கண்டனங்கள் வலுக்கின்றன

292 0

தொழிற்சாலைகளை மூடுவது பொருளாதார தற்கொலை என்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஜக்கிவாசுதேவ் கருத்து கூறியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடத் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் லண்டனுக்கு சென்ற யோகா குரு பாபா ராம் தேவ் வேதாந்தா குழுமத்தின் தலைவரும், ஸ்டெர்லைட் ஆலையின் நிறுவனருமான அனில் அகர்வாலையும், அவருடைய மனைவியையும் நேரில் சந்தித்துப் பேசினார். அதன்பின்னர் பாபா ராம்தேவ் ஸ்டெர்லைட் ஆலையின் பெயரைக் குறிப்பிடாமல் அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் ஈஷா அறக்கட்டளை நடத்தி வரும் சத்குரு ஜக்கி வாசுதேவ், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-

நான் தாமிரம் உருக்கும் தொழிலில் வல்லுநர் இல்லை. ஆனால், இந்தியாவில் தாமிரத்தின் பயன்பாடு அதிகம் என்பதால், அதன் தேவையும் அதிகம் என்பது மட்டும் எனக்கு தெரியும். நாம் சொந்தமாக தாமிரம் உற்பத்தி செய்யாமல் இருந்தால், சீனா போன்ற வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியது இருக்கும்.
சுற்றுச்சூழல் விதிமுறை மீறல்கள் குறித்து சட்டப்பூர்வமாகவே அணுக வேண்டும். மிகப்பெரிய தொழில்களை அடித்துக்கொல்வது என்பது பொருளாதார தற்கொலையாகும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஜக்கி வாசுதேவ் கருத்துக்கு நடிகர் சித்தார்த் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a comment