பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் பிரதமர் அப்பாசி போட்டியிட தடை இல்லை

17774 0

பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் பிரதமர் அப்பாசி போட்டியிட தடை இல்லை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் அடுத்த மாதம் 25-ந் தேதி பொதுத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில், முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவருமான அப்பாசி, இஸ்லாமாபாத் (என்.ஏ-53) தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (குலாலாய்) கட்சி தலைவர் ஆயிஷா குலாலாய் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர்களின் வேட்பு மனுக்களில் தவறுகள் இருப்பதாக கூறி தொகுதி தேர்தல் அதிகாரி முகமது அத்னன் கான் நிராகரித்தார்.

இதை எதிர்த்து அவர்கள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார்கள்.

அந்த முறையீடுகளை நீதிபதி மோசின் கயானி நேற்று விசாரித்தார். விசாரணை முடிவில் அவர்கள் இருவரது வேட்பு மனுக்களும் ஏற்கப்படவேண்டும் என்றும், அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை இல்லை என்றும் உத்தரவிட்டார். 2017-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் சட்டம் பிரிவு 62, சிறு சிறு தவறுகள் வேட்பு மனுவில் இருந்தால், அதை விட்டு விட்டு வேட்பு மனுவை ஏற்றுக்கொள்ள அனுமதி அளித்து உள்ளதாக நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டு உள்ளார்.

Leave a comment