எமது இனத்தின் வரலாற்று அடையாளங்களை சிதைப்பதற்கு நாம் எவருக்கும் இடமளிக்க முடியாது-சிவஞானம் சிறீதரன்

372 0

எமது இனத்தின் வரலாற்று அடையாளங்களை சிதைப்பதற்கு நாம் எவருக்கும் இடமளிக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மண்ணில் இருந்து ஆன்மீக சமூகப்பணிகள் ஆற்றிய பெரியார்களின் சிலைகளை நேற்றையதினம் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“எமது இனம் எமது இருப்பை தக்கவைப்பதற்காகவும், அரசியல் தீர்விற்காகவும் 70 ஆண்டுகளுக்கு மேலாக போராடிக்கொண்டிருக்கிறது.

எனினும் சிங்கள அரசு எமது இனத்தின் வரலாற்றை அழிப்பதற்கு திட்டமிட்டு செயற்படுகிறது.குறிப்பாக கடந்த அரசு எமது மண்ணினுடைய வராலாறுகளை மாற்றுவதில் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.

கிளிநொச்சி மண்ணில் கிளிநொச்சி டிப்போச்சந்தியில் உள்ள இராணுவ நினைவுச்சின்னத்தில் பழமைவாய்ந்த கற்களை வைத்து அந்த நினைவுச்சின்னத்தை கட்டியெழுப்பியிருப்பதன் நோக்கம் தான் என்ன?இதற்குப்பின்னால் வரலாற்றை மாற்றி அவர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வரலாற்றை எழுத சிங்கள அரசு விரும்புகிறது. அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கமுடியாது.

இவற்றை கருத்தில் கொண்டே எமது தலைவர் தமிழீழ வரலாறு என்கின்ற பாடத்தை பாடசாலைகளில் அறிமுகப்படுத்தியிருந்தார்.இவை மட்டுமல்ல கடந்த அரசோடு இருந்த எம் இனத்தின் புல்லுருவிகளும் சிங்கள அரசு விரும்பியது போன்று கிளிநொச்சி மண்ணின் வரலாற்றை மாற்றி எமது இனத்துக்கு பெரும் துரோகம் இழைத்திருக்கிறார்கள்.

எமது அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச் செல்வன், சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் இன்னும் எத்தனையோ சமர்க்கள நாயகர்களை வைத்து அஞ்சலி செய்த கூட்டுறவாளர் மண்டபத்தை மஹிந்த ராஜபக்சவின் புதல்வன் திறந்து வைத்துள்ளதாக நினைவுக்கல்லில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இவை எல்லாம் எம் இனத்தின் புல்லுருவிகளின் ஆசீர்வாதத்துடனே நடைபெற்றிருக்கிறது.மலையக மக்கள் முன்னணியினுடைய தலைவர் முன்னாள் அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட மத்தியகல்லூரியின் பிரதான மண்டபம் தமது தேவைக்கு ஏற்றவாறு தங்களால் திறந்து வைக்கப்பட்டது என நினைவுக்கல்லில் பெயர்களை செதுக்கியிருக்கிறார்கள்.

இதில் எல்லாம் எமது அடுத்த தலைமுறைக்கு எமது வரலாற்றை தெரியவிடாது தடுக்கவேண்டும் என்கின்ற நோக்கம் இருக்கிறது” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment