‘சுஜாத் புகாரியின் நிலைதான்’ – பத்திரிகையாளர்களுக்கு பாஜக தலைவர் மிரட்டல்

241 0

காஷ்மீர் பத்திரிகையாளர்கள் ஒரு வரம்பை வகுத்துக்கொள்ள வேண்டும், இல்லை என்றால் சுஜாத் புகாரியின் (சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர்) நிலைதான் உங்களுக்கு என பாஜக தலைவர் லால் சிங் பேசியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீரில் சில வாரங்களுக்கு முன்னர்  “ரைசிங் காஷ்மீர்’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரியை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜக – பிடிபி கூட்டணி உடைவதற்கு முக்கிய காரணமாக இந்த சம்பவம் கூறப்பட்டது.
இந்நிலையில், அம்மாநில பாஜக மூத்த தலைவர் லால் சிங் நேற்று பேசுகையில், “காஷ்மீரில் உள்ள பத்திரிகையாளர்கள், தாங்கள் கொண்டுள்ள பயங்கரவாத ஆதரவு நிலைப்பாட்டுக்கும், செய்திகளை உண்மைத் தன்மையுடன் அளிப்பதற்கும் இடையே ஒரு வரம்பை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றார். இல்லையனில் சுஜாத் புகாரிக்கு ஏற்பட்ட நிலைதான் மற்றவர்களுக்கும் நேரக்கூடும்” என மிரட்டல் தொணியில் பேசினார்.
லால் சிங்கின் இந்த பேச்சு கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. இதற்கு அந்த மாநில பத்திரிகையாளர் சங்கமும், தேசிய மாநாட்டுக் கட்சியும், பிடிபி கட்சியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.  இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி லால் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் அக்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
காஷ்மீர் மாநிலம், கதுவா பகுதியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்டு, பின்னர் மந்திரி பதவியி இருந்து லால் சிங் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment