அரசு டாக்டர்கள் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

211 0

அரசு டாக்டர்களின் பணி ஓய்வு வயதை 65 ஆக உயர்த்துவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுபவர் கே.புருஷோத்தமன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

இந்திய மருத்துவ கவுன்சில் கடந்த 2007-ம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின்படி, அரசு டாக்டர்களின் பணி ஓய்வு பெறும் வயது 70 என்று நிர்ணயம் செய்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிக்கையின் அடிப்படையில், அரியானா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அரசு டாக்டர்களின் ஓய்வு வயது 58-ல் இருந்து 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஓய்வு வயதை உயர்த்தியதை பிரதமரும் வரவேற்றுள்ளார்.

ஓய்வு பெறும் வயதை உயர்த்துவதனால், பொதுமக்களுக்கு மிகவும் நன்மை ஏற்படும். அனுபவம் வாய்ந்த டாக்டர்களிடம் அவர்கள் சிகிச்சை பெறலாம். அதுமட்டுமல்ல, மருத்துவ மாணவர்களுக்கும் நன்மை ஏற்படும்.

எனவே, அரசு டாக்டர்களின் ஓய்வு வயதை உயர்த்தும்படி தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந்தேதி கோரிக்கை மனு கொடுத்தேன். இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. பணி ஓய்வுபெறும் வயதை உயர்த்தினால், என் வயதையொட்டி உள்ள 800 டாக்டர்கள் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் விசாரித்தனர்.

பின்னர், மனுதாரர் கடந்த ஆண்டு கொடுத்த கோரிக்கை மனுவை தமிழக தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் சட்டப்படி பரிசீலிக்க வேண்டும். அப்போது மனுதாரர் மட்டுமல்லாமல், அரசு டாக்டர்களின் கருத்தையும் கேட்கவேண்டும். அதன்பின், ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது குறித்து தகுந்த முடிவினை எடுக்கவேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a comment