மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்தன மடு ஆற்றின் பிரதான வீதியில் உள்ள வேரம், கல்மடு ஆற்றுக்கு குறுக்கே பாலம் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் இன்றைய தினம் ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரன் தலைமையில் மேற்படி பிரதேசத்தில் இடம்பெற்றது.
மேற்படி பாலம் அமைப்பது தொடர்பில் பிரதேச மக்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதேச சபை உறுப்பினர், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் ஆகியோருடன் தொடர்பு கொண்டதற்கமைவாக இன்றைய தினம் இப்பிரதேசத்திற்கான களவிஜயம் மற்றும் கலந்துரையாடல் என்பன இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலின் போது மக்களால்ல் சந்தனமடு ஆற்றுக்குச் செல்லும் பிரதான வீதியில் மூன்று சிறிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. ஆனால் இந்தக் கல்மடு வேரம் பிரதேசத்தில் கல்மடு ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட வேண்டிய பாலமானது மிகவும் பயன்மிக்கதாக அமையும். ஏனெனில் இவ்வாற்றினைக் கடந்து ஈரளக்குளம், இலுக்குப்பொத்தானை, பெருமாவெளி, பெரியவெட்டவான் போன்ற பல்வேறு கிராமங்கள் இருக்கின்றன. இக்கிராமங்களுக்குச் செல்லும் பிரதான வீதியாக இவ்வீதி காணப்படுகின்றது. அத்துடன் நான்கு பாடசாலைகளும் இருக்கின்றன. அமைக்கப்பட வேண்டிய இப்பாலமானது அமையப்பெற்றால் பிரதேச மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் எனப் பல்வேறு தரப்பினர் இதன் மூலம் நன்மையடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இவ்விடத்தினைச் சென்று பார்வையிட்ட பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் மாகாணசபை அமைச்சர் இதன் சராசரி அளிவீடுகளை மேற்கொண்டனர். பின்னர் இப்பாலம் அமைப்பது தொடர்பில் உரிய அதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு: சென்று இதனை அமைப்பதற்குரிய சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

