நான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லை!

283 0

விக்கியின் பதவிக்காலம் நீடிக்கப்படாது – அமைச்சர் ராஜித என்ற தலைப்பில் இன்றைய தினக்குரல் பத்திரிகையில் தரப்பட்ட செய்தி சம்பந்தமாக நான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லை. பத்திரிகைகள் திடீரென்று கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டாம் என்று எனது ஆலோசகர்கள் கூறியதைப் புறக்கணித்ததால் வந்த வினை இது.

எமது பதவிக்காலம் முடிந்து தேர்தல் தாமதித்து நடக்கப்படவிருப்பதைப் பற்றியே கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. தாமதித்து தேர்தல்கள் நடைபெற்றால் ஆளுநர் ஆட்சி வரும். இது தவிர்க்கப்படவேண்டும். அவ்வாறு ஆளுநர் ஆண்டால் 13வது திருத்தச்சட்டம் கொண்டு வந்ததற்கு அர்த்தமே இல்லாது போய்விடும், மத்திய அரசாங்கம் தமக்கு வேண்டியவற்றை இங்கு நடத்த அது வழி அமைத்துவிடும் என்ற அர்த்தத்தில் கூற வந்த போது தான் தேர்தல் வரையில் எமது பதவிக்காலம் நீடிக்கப்படுவதாக இருந்தால் இந்தப் பிரச்சனை எழாது என்று கூறினேன்.

நான் என் பதவியை நீடிக்கக் கோரவில்லை. அதனுடைய அர்த்தம் தேர்தல்கள் உரிய காலத்தில் நடத்தப்படவேண்டும் என்பதே. அதைச் சாட்டாக வைத்து எமது வடகிழக்கு மாகாணங்களில் எமக்கு உகந்தவை அல்ல என்று நாம் அடையாளம் காணும் விடயங்களை ஆளுநர்கள் இங்கு வேரூன்ற விட இடமளிக்கக் கூடாது என்ற அர்த்தத்திலேயே அதைக் கூறினேன்.

இவ்வாறான பத்திரிகையாளர் கேள்விகளில் பக்கச் சார்பான அரசியல் பின்னணி இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் போல் தெரிகிறது. அவர்கள் கூறுவதை வைத்தே அமைச்சர் அவர்கள் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்.
முதலமைச்சர்
வடமாகாணம்

Leave a comment