ஐ.நா. மனித உரிமைகள் சபையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது எமக்குப் பாதிப்பானது. இருப்பினும், அடுத்த கட்டத் தலைமைத்துவம் வழங்கிய, உறுதியான தலைமைத்துவம் வழங்கக் கூடிய தரப்புக்களுடன் நாம் பேச்சு நடத்தவுள்ளோம். அமெரிக்கா உறுப்புரிமையிலிருந்து வெளியேறினாலும், வெளியிலிருந்து கையாளக்கூடிய வகையில் அவர்களின் உதவிகளைப் ற்றுக் கொள்ளவும் பேச்சு நடத்துவோம்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் வெளியேற்றம் எமக்குப் பாதிப்பானது. அவர்கள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உறுப்பினர்களாக இல்லாவிடினும், அவர்கள் ஊடாக விடயங்களை எப்படிச் செய்விப்பது என்பது தொடர்பில் அமெரிக்காவுடன் நாங்கள் பேச்சு நடத்துவோம். வெளியில் இருந்து எப்படி விடயங்களைக் கையாளலாம் என்று ஆராய்வோம்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தலைமை வகித்து தீர்மானங்களைக் கொண்டு வரும்போது, அதற்கு இரண்டாம் நிலையிலிருந்து தலைமைத்துவம் வழங்கிய பிரிட்டன் (யூ.கே), மொன்டாரியோ, மசிடேனானியா ஆகிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இருக்கின்றன. அந்த நாடுகளுடன் பேச்சு நடத்துவோம்.
இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தலைமை தாங்கி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது. அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேண்டியது, அதனைக் கண்காணிக்கவேண்டியது எல்லாம் ஐ.நா. மனித உரிமைகள் சபையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருமே.
ஆனால் அழுத்தம் கொடுப்பது, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலேயே அமெரிக்காவின் தேவை இருக்கின்றது. அமெரிக்கா வெளியேறினாலும், உறுதியாக தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஏனைய தரப்புக்களுடன் நாங்கள் பேச்சு நடத்தவுள்ளோம். பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் (ஈயூ) இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும். மாற்று வழிகளாக இதனை ஆராய்கின்றோம் – என்றார்.