வலி வடக்கில் விமான நிலையம் துறைமுகம் பகுதிகளை தவிர 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பகுதி இராணுவத்தினர் வசமுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
வலிகாமம் வடக்கில் 6 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பகுதியானது உயர் பாதுகாப்பு வலையமாக இருந்தது தற்போது 3 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 3 ஆயிரம் ஏக்கர் காணியில் குறிப்பிட்டளவு பலாலி விமான நிலைத்திற்கும் , காங்கேசன்துறை துறைமுகத்திற்குமான நிலப்பகுதிகளை விட 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பகுதிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது.
வலிகாம் வடக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படாதுள்ளது. குறிப்பாக மயிலிட்டித்துறை வடக்கு, பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, ஆகிய கிராம சேவையாளர்கள் பிரிவுகளே முழுமையாக விடுவிக்கப்படாதுள்ளன. . இதேவேளை 18 கிராம அலுவலர் பிரிவுகள் பகுதி அளவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.மேலும் காங்கேசன்துறையில் 515 ஆவது பிரிகேட் தலைமையகம் விடுவிக்கப்படுமேயானால் காங்கேசன்துறை நகர் முழுமையாக விடுவிக்கப்பட்டு விடும். இவ்வாறு விடுவிக்கப்படுமானால் மக்கள் மீள் குடியேற்றப்பட்டு நிலைபேறான அபிவிருத்தியை காங்கேசன் துறை நகர் அடைந்து விடுமென அவர் மேலும் தெரிவித்தார்.