பிறிஜிங் லங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் தாயிலான் குடியிருப்பு மக்கள் இணைந்து மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் இன்று (21) வியாழக்கிழமை காலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, சின்னக்கரிசல் தாயிலான் குடியிருப்பு பகுதியில் குறித்த கழுதைகள் மருத்துவமனை மற்றும் கல்வி மையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உலக மிருகங்கள் பாதுகாப்பு மையத்தின் பிரதி நிதி ஒட்டாரா குணவர்த்தன கலந்து சிறப்பித்ததோடு மன்னார் பிரதேச சபையின் தலைவர் முஹமட் முஜாகிர் மற்றும் நகர சபையின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
மன்னாரில் காயமடைந்த மற்றும் புறக்கணிக்கப்பட்ட கழுதைகளைப் பராமரிக்கும் இடமாக இந்த மருத்துவமனை உருவாக்கப்பட்டுள்ளதோடு, கழுதைகள் பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்பட்டு அதனைப் பழக்கப்படுத்தி பயனுள்ள நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தும் நடவடிக்கைகளும் குறித்த நிலையத்தில் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

