ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். இருக்கும் அணிக்கு நான் ஒருபோதும் செல்லமாட்டேன் என்று ஆண்டிப்பட்டி தொகுதியில் மக்களை சந்தித்து கருத்து கேட்டபோது தங்கதமிழ்செல்வன் கூறினார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் மக்களை சந்தித்து கருத்து கேட்ட தங்கதமிழ்செல்வன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் மட்டுமின்றி மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே நான் ஏற்கனவே கூறியபடி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவது உறுதி. இன்று நான் சென்னைக்கு சென்று மூத்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தி அதற்கான முடிவுகளை ஆண்டிப்பட்டி தொகுதி மக்களிடம் அறிவிப்பேன்.
வழக்கை வாபஸ் பெறுவதாகவும், நாடகம் ஆடுவதாகவும் சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர். ஆனால் நாடகம் நடத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஓ.பி.எஸ்.- ஈ.பி.எஸ். இருக்கும் அணிக்கு நான் ஒருபோதும் செல்லமாட்டேன். நான் மீண்டும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் கூறி வருகிறார்கள். எனவே அது குறித்த முடிவினை தேர்தல் நேரத்தில் அறிவிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.