முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஹொரவ்பொத்தானை பிரசேத்திலுள்ள முக்கரவெவ கிராமத்துக்கு இன்று (17) பிற்பகல் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதனையடுத்து, முக்கரவெவ ஜூம்மா பள்ளி வாசலில் விஷேட கூட்டமும் இடம்பெற்றது.
அக்கூட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில், “மண்ணெண்ணெயின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறைவாக விற்பனை செய்யப்பட்டு வந்த மண்ணெண்ணெயின் விலையை அளவுக்கு அதிகமா கூட்டி விட்டு மீண்டும் சிறியளவில் குறைத்துள்ளனர்.
இதுதான் அவர்களுடைய சேவை, மக்கள் இனிமேலும் ஏமாற மாட்டார்கள் என்பதை என்னால் அவதானிக்க முடிகின்றது. இனங்களுக்கிடையே முரண்பாடுகளை தோற்றுவித்தவர்கள் யார் என்பதை, மக்கள் அறிந்திருப்பார்கள். மக்கள் இப்போது என்னை ஆதரிப்பதை என்னால் அவதானிக்க முடிகின்றது.
அனுராதபுரத்துக்கு 4 மணித்தியாலயத்தில் சென்ற பயணத்தை 40 நிமிடத்தில் செல்வதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருப்பதை மக்கள் தெரிந்திருப்பீர்கள். அதேபோல இனிவரும் காலங்களில் 18 வயதாகினால், இளைஞர்கள் கட்டும் மணிக்கூட்டின் விலையை பார்த்தும், அவர்கள் பாவிக்கும் கையடக்க தொலைபேசியை பார்த்தும் வரி அறவிடப்படும். எல்லாவற்றிற்கும் வரி அறவிடப்படும். எனவே, மக்கள் இனி ஏமாறமாட்டார்கள் என்பதை நான் அறிவேன். அத்துடன் ஒற்றுமையாக வாழ்வதையே நான் விரும்புகின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டார்.