மன்னாரில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் இடை நிறுத்தம்

526 0

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்பு அகழ்வு பணிகள் இன்று 14 ஆவது நாளாகவும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இடம்பெற்றது.

இன்று (14) காலை 7.30 மணியளவில் ஆரம்பமான அகழ்வு பணிகள், மதியம் 12 மணி வரை இடம்பெற்ற நிலையில் குறித்த அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

அகழ்வு பணிகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விசேட சட்ட வைத்திய நிபுணர் டபிள்யு.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ச, இன்று மதியம் 12 மணியுடன் இடை நிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை 18 ஆம் திகதி ஆரம்பமாகும் என குறிப்பிட்டார்.

மேலும், மன்னார் நீதவான் முன்னிலையில், எனது தலைமையில் இடம்பெற்ற அகழ்வு பணிகளில், களனி பல்கலைக்கழக ´தொல்பொருள்´ அகழ்வு தொடர்பான கற்கை நெறிகளை பயிலும் மாணவர்களும், பயிற்சி நிலையைச் சேர்ந்த நான்கு வைத்திய அதிகாரிகளும், பல் நிபுணத்துவ வைத்திய அதிகாரி ஒருவரும், களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா குழுவினரும் இணைந்து செயற்பட்டதாக விசேட சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

இதுவரை எவ்வளவு மனித எலும்புகள், மண்டை ஓடுகள் மீட்கப்பட்டுள்ளன என்பது தொடர்பில் கருத்த கூற முடியாது எனவும் இறுதியாகவே அது தொடர்பான தகவல்களை தெரிவிக்க முடியும் எனவும் விசேட சட்ட வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக இடம்பெற்ற அகழ்வு பணிகளின் போது குறித்த விற்பனை நிலைய வளாகம் கடல் பகுதியை சார்ந்தமையினால் குறித்த வளாகத்தில் இருந்து கடல் மட்டத்திற்கு கீழும், கடல் மட்டத்திற்கு மேல் பகுதியிலும் இரு பிரிவுகளாக மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ளது. தற்போது மீட்கப்பட்ட மனித எலும்புகளின் மாதிரியின் கால நிர்ணயத்தை அளவிடும் காபன் பரிசோதனை மேற்கொள்ளப்படவதாகவும் விசேட சட்ட வைத்திய நிபுணர் கூறினார்.

இதேவேளை, மீட்கப்பட்ட மனித எலும்பு மாதிரிகள் தற்போது மன்னார் நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ளது. இது தவிர தற்போது குறித்த அகழ்வுகளில் இருந்து தடையங்களாக 2 சிறிய மணிகள், சட்டி, பாணை, 2 பொலித்தீன் பைகள், 2 மோதிரத்தை ஒத்த பொருட்கள், 3 சிறிய அளவிலான கறுப்பு நிற பொருட்கள் என்பனவும் அகழ்வுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment