சரத் என் சில்வாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

254 0

மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட முறை சட்டத்துக்கு மாறானது என்று உத்தரவிடுமாறு கோரி முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரியசாத் டெப், புவனேக அலுவிஹரே மற்றும் நலின் பெரேரா ஆகிய மூன்று நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று அந்த மனு அழைக்கப்பட்ட போது பெரும்பான்மை தீர்மானத்தின் படி நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் திருத்த சட்டமூலம், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படாமல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டமை அரசியலமைப்புக்கு மாற்றமானது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மனுவுக்கு எதிர்ப்பு வௌியிட்ட சட்டமா அதிபர், அந்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் அது தொடர்பில் நீதிமன்றத்தில் விசாரிக்க முடியாது என்று தெரிவித்தார்.

அதன்படி மனுவை விசாரிக்காமல் நிராகரிப்பதற்கான பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்மானத்தை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் அறிவித்தார்.

Leave a comment