மின்னணு பரிமாற்றத்தில் அபுதாபி வங்கியில் 63.5 கோடி திர்ஹம் கொள்ளை – இந்தியர் உட்பட 28 பேருக்கு சிறை

284 0

அபுதாபி நாட்டு வங்கியில் இருந்து 63.5 கோடி திர்ஹம்களை மின்னணு பரிமாற்றத்தின் மூலம் கள்ளத்தனமாக வேறு கணக்குகளுக்கு கைமாற்றிய இந்தியர் உட்பட 28 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அபுதாபி நாட்டு வங்கியில் பணம் போட்டு வைத்திருந்த ஒருநபருக்கு சொந்தமான தொகையை அவரது அனுமதியின்றி சிலர் மின்னணு பரிமாற்றத்தின் மூலம் தங்கள் கணக்குகளுக்கு மாற்றிகொண்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த மோசடி புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்துக்குள் விரைந்து செயலாற்றிய அபுதாபி சி.ஐ.டி. போலீசார், கைமாற்றப்பட்ட பணத்தில் இருந்து 62.5 கோடி திர்ஹம்களை கைப்பற்றி, மீட்டனர்.
இந்த கொள்ளை தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா மற்றும் கனடா நாடுகளை சேர்ந்த 33 பேரை கைது செய்த போலீசார், அபுதாபி கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிந்து கடந்த புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் 8 பேருக்கு தலா 15 ஆண்டுகள் மற்றும் 10 பேருக்கு தலா பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்படி தொகையை தங்களது வங்கி கணக்குகளில் மாற்றி, இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்த பத்து பேரில் 9 பேருக்கு தலா 7 ஆண்டுகள் மற்றும் ஒருவருக்கு மட்டும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த கொள்ளையில் போலீசார் பறிமுதல் செய்த தொகைபோக மீதமுள்ள தொகையான 90 லட்சம் திர்ஹம் மற்றும் ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்க முயன்ற 63.5 கோடி திர்ஹம் ஆகியவற்றை அபராதமாக திருப்பி செலுத்துமாறும் குற்றவாளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மேற்படி வங்கிக்கு இழப்பீடாக 21 ஆயிரம் திர்ஹம் மற்றும் கோர்ட்டின் வழக்கு செலவினங்களுக்கான தொகையையும் செலுத்துமாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கில் இருந்து 5 பேர் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர்.

Leave a comment