அந்தமானில் ஓட்டல் தீ விபத்தில் 3 வயது குழந்தை பலி

906 21

அந்தமானில் ஓட்டல் தீ விபத்தில் 3 வயது குழந்தை மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தது. 39 சுற்றுலா பயணிகள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தமான், சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமி ஆகும். அங்கு போர்ட் பிளேட் நகரத்தில் நார்த் ரீப் ஓட்டல் என்ற ஓட்டல் உள்ளது. அந்த ஓட்டலில் நேற்று அதிகாலை 3½ மணிக்கு திடீரென தீ பிடித்தது. பொருட்கள் வைக்கிற அறையில் பிடித்த தீ, மளமளவென ஓட்டலின் பிற பகுதிகளுக்கும் பரவியது. பெருமளவில் புகை மண்டலமும் உருவானது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இருப்பினும் இந்த தீ விபத்தில் 3 வயதான குழந்தை, மூச்சு திணறி பலியானது. 39 பேர் தீ காயங்களாலும், மூச்சு திணறலாலும் அவதிப்பட்டனர். அவர்கள் மிகுந்த சிரமத்துக்கு இடையே அங்கு இருந்து மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 7 பேருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தீ விபத்து குறித்த தகவல் அறிந்ததும் துணை நிலை கவர்னர் அட்மிரல் டி.கே.சிங், ஆஸ்பத்திரிக்கு சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Leave a comment