வடகொரிய தலைவருடன் திட்டமிட்டபடி ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் பேச்சுவார்த்தை: டிரம்ப்

211 0

ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதில் நிர்ணயிக்கப்பட்ட தேதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது என டிரம்ப் கூறியுள்ளார்.

அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதனால் அண்மைக்காலமாக வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் அமெரிக்காவுடன் சமரச போக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசுவதற்கும் தயார் என்று அறிவித்தார். இதனால் இருவரும் சிங்கப்பூரில் அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது.

இதற்கு முதலில் ஒப்புக்கொண்ட டிரம்ப் பின்பு மறுத்தார். இதற்கிடையே தனது நாட்டின் அணு ஆயுத சோதனைக் கூடத்தை கிம் ஜாங் அன் முற்றிலுமாக தகர்த்ததுடன் டிரம்பை சந்தித்து பேசுவதிலும் உறுதியாக இருந்தார். இதற்காக தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடத்தினார். இதற்கு பலனும் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து டிரம்ப் நேற்று கிம் ஜாங் அன் உடனான சந்திப்பை உறுதி செய்தார். இதுபற்றி நிருபர்களிடம் டிரம்ப் கூறுகையில், “ஜூன் 12-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும் சந்திப்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். இதில் நிர்ணயிக்கப்பட்ட தேதி, இடம் ஆகியவற்றில் எந்த மாற்றமும் கிடையாது. சந்திப்புக்கான அனைத்தும் நன்றாகவே நடக்கிறது. இந்த சந்திப்பில் என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்” என்று குறிப்பிட்டார்.

Leave a comment