அமெரிக்கா – வடகொரியா இடையே பேச்சுவார்த்தை தொடர நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஜப்பான் பிரதமர் அபே

293 0

அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான பேச்சுவார்த்தை நடப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜப்பான் பிரதமர் அபே தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோரது சந்திப்பு அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்திக்க திட்டமிட்டப்பட்டு இருந்தது. இதற்காக அமெரிக்க தரப்பில் இருந்து சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அணு ஆயுத சோதனை கூடங்களை அழித்துவிட்ட வடகொரியா, சில நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
நேற்று வெள்ளை மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறுகையில், கிம் உடனான ஜூன் 12 சந்திப்பு வேலைக்கு ஆகாது என்றே தோன்றுகிறது என தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் உடன் ஜூன் 12-ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான பேச்சுவார்த்தை நடப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என ஜப்பான் பிரதமர் அபே தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ஜப்பான் பிரதமர் அபே கூறுகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் – வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது வருத்தம் அளிக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே நடக்கவுள்ள இந்த சந்திப்பால் கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவும். எனவே, இருநாடுகளின் பேச்சுவார்த்தை தொடர்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a comment