பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு தாகூர் படத்தை பரிசளித்த இளைஞர்

562 0

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், பாதுகாப்பு வளையத்தை மீறி பிரதமர் மோடிக்கு தாகூர் படம் கொடுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. 

வங்காளதேச விடுதலைப் போரின்போது இந்தியா, வங்காளதேசம் தொடர்புடைய வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கவும், இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பிரதிபலிக்கும் வகையிலும் மிகப்பெரிய அரங்கம் அமைப்பதற்காக, பிர்பம் மாவட்டம் சாந்திநிகேதன் பகுதியில் உள்ள விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சுமார் 35,000 சதுர அடி நிலத்தை மேற்கு வங்காளம் மாநில அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
அந்த இடத்தில் 25 கோடி ரூபாய் செலவில் வங்காளதேச பவன் என்ற பெயரில் புதிய அரங்கம் ஒன்றை அந்நாட்டு அரசு கட்டியுள்ளது.
இந்த கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்திய பிரதமர் மோடி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகிய இருவரும் வங்காளதேச பவனை திறந்து வைத்தனர். விழாவில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்றார்.
மேலும், விஸ்வ பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.
பட்டமளிப்பு விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி திரும்பிக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்துக்குள் நுழைந்தார். அவர் தான் வைத்திருந்த ரவீந்திரநாத் தாகூர் படத்தை பிர்தமர் மோடிக்கு பரிசளித்தார்.
அவரும் அதை வாங்கி பார்த்துவிட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கொடுத்தார். இச்சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a comment