சட்டரீதியாகவே கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்தது!

213 0

தமக்கு பிணை வழங்குமாறு கோரி பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் தாக்கல் செய்த மீள்பரிசீலனை மனு மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி ப்ரீதி பத்மன் சுரசேன மற்றும் நீதிபதி சிரான் குணரத்ன முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன நீதிமன்றில் தெரிவித்ததாவது, மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ள தம்மை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மறுப்புத் தெரிவித்ததாக கூறினர்.

எனினும் விசாரணைகளின் படி இரகசியப் பொலிஸார் நீதிமன்றுக்கு சமர்பித்த அறிக்கையில் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் எந்த தவறும் இனங்காணப்படவில்லை என்று மனுதாரர்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட பிணை மறுப்புத் தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்து தம்மை பிணையில் விடுவிக்க உத்தரவிடுமாறு அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் கேட்டுள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு சட்டரீதியாகவே கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததாக இதன்போது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் யசந்த கோதாகொட மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்தார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி வழங்கிய முறைப்பாடு ஆகியவற்றின் பிரகாரம் இரகசியப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததாக யசந்த கோதாகொட கூறினார்.

விசாரணைகளில் வௌியான தகவல்களின் பிரகாரம் இரகசியப் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்பித்ததாகவும், அதன்படி விடயங்களை ஆராய்ந்து சந்தேகநபர்களுக்கு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்க மறுத்ததாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அரச தரப்பில் விளக்கமளிப்பது ஜூன் 01ம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

Leave a comment