மருத்துவம் – கல்வி நிதி உதவி: 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் – கருணாநிதி வழங்கினார்

226 0

மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை   தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்கினார்.

தி.மு.க. தலைமை அலுவலகம்   வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியை வங்கியில் வைப்புநிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப் பெறும் வட்டி தொகையை கொண்டு மாதந்தோறும் ஏழை-எளிய, நலிந்தோருக்கு உதவி தொகையாக கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது. வைப்புநிதியாக போடப்பட்ட ரூ.5 கோடியில், 30-வது புத்தகக் கண்காட்சியை கருணாநிதி திறந்த வைத்த போது, கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ரூ.1 கோடி வழங்கினார். இதையடுத்து ரூ.4 கோடியில் வரும் வட்டி தொகையில் இருந்து கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து உதவி தொகை வழங்கப்படுகிறது.

2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.4 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம் ஆகும். தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால், கடந்த மாதம் வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை 15-ந் தேதி(நேற்று) வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment