வாடிக்கையாளர் வங்கியில் டெபாசிட் செய்த பணம் ஆன்லைன் மூலம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை அடுத்த ஒக்கியம் துரைப்பாக்கம் ராஜுநகர் 2-வது சாலையில் வசித்து வருபவர் வெங்கட் சம்பத்குமார் (25).
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் இங்கு தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ‘சிட்டி’ வங்கியில் கணக்கு உள்ளது. அந்த கணக்கை இங்கிருந்து நிர்வகித்து வந்தார். அவரது கணக்கில் ரூ.40 ஆயிரம் இருந்தது.
அந்த பணத்தில் கடந்த 4-ந்தேதி ரூ.10 ஆயிரம் திடீரென குறைந்தது. வங்கியில் இருந்து வெங்கட் சம்பத்குமார் பணத்தை எடுக்காத நிலையில் பணம் மாயமானது.
இந்த நிலையில் 10-ந் தேதி மேலும் ரூ.30 ஆயிரம் பணத்தை யாரோ கணக்கில் இருந்து எடுத்து விட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கண்ணகி நகர் போலீசில் புகார் செய் தார்.
போலீசார் இங்குள்ள கிளையில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மகாராஷ்டிராவில் இருந்து பணம் ஆன்லைன் மூலம் எடுத்து இருப்பதாக வங்கி அதிகாரி தெரிவித்தார்.
வாடிக்கையாளர் கணக்கில் உள்ள பணத்தை வேறு யாரோ எப்படி எடுக்க முடியும் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில் விசாரணை நடந்து வருகிறது.