எம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர்!

14659 0

போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறத் தொடங்கியிருக்கிறார்கள்.

அந்த வகையில் இறுதி யுத்தகாலத்தில் ஊடகப் பணியாற்றியவர்களின் குரலும் மேலேழவேண்டிய காலத்தை அடைந்திருக்கிறோம். இறுதி யுத்த காலத்தில் புலிகளின் குரல் வானொலி, ஈழநாதம் பத்திரிகை, புதினம் போன்ற சில இணையதளங்கள் இயங்கின.

இவற்றுக்கு செய்தியாளர்களாகப் பணியாற்றிய பலர் இன்று உறை நிலையில் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் மௌனம் கலைக்கப்படவேண்டியது. அவர்கள் சாட்சியமற்ற இனப் படுகொலையின் மிக முக்கிய சாட்சியங்கள்.
ஈழநாதம் பத்திரிகை நிறுவனம் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் ஒவ்வொரு செய்தியாளர்களை நியமித்திருந்தது. அவ்வகையில் புலிகளின் குரல், ஈழநாதம் ஆகிய ஊடகங்களின் முல்லைத்தீவு பிரதேசத்துக்குரிய செய்தியாளராகக் கடமையாற்றியவர் சகிலா அக்கா.

செய்தியாளர் சகீலா

யுத்த காலத்தில் ஊடகப் பணியாற்றிய ஒரேயொரு பெண் செய்தியாளர் இவர். குடும்பத்தில் இருவர் மாவீரர்கள். யுத்தத்தின் பின் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை. சிறையில் இருந்து விடுதலையாகியதும் கிடைத்த சமூகப்புறக்கணிப்பு.

இவ்வாறான பல துயரங்களை சுமந்த ஒரு பெண்ணாகி இன்று வாழ்கிறார். அண்மையில் என்னுடன் பேசும்போது “ ஒருதரும் என்னோடு கதைக்கிறதில்ல, எனக்கு காசு ஒன்றும் வேண்டாம். நீ அடிக்கடி கதைக்கிறியாடா” என அப்பாவிதனமாகக் கேட்டார் சகிலா அக்கா.

அவரின் துணிச்சல் மிக்க ஊடகப்பணிக்காகவே அவர் மதிப்பளிக்கப்படவேண்டியவர். இறுதி யுத்த காலப் பகுதியில் சகிலா அக்கா மற்றும் மன்னாரை சேர்ந்த ஐயா என்பவரும் இறுதிநாள் வரைக்கும் செய்தியாளராகப் பணியாற்றியிருந்தனர். ஏனைய பிரதேச செய்தியாளர்கள் நெருக்கடி நிலையினால் பணியினைத் தொடரமுடியாமல் போய்விட்டது.

நேரகாலமற்று மக்கள் சிதறியோடிக்கொண்டே இருந்த காலமது. எறிகணைகள் அடிக்கடி வீழ்ந்து படுகாயமடைந்துகொண்டிருப்பார்கள். அவ்வேளையில் எல்லாம் குண்டுசத்தங்கள் கேட்கும் திசையை நோக்கி சகிலா அக்கா தன் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ளாது கெமராவோடு களத்தில் நிற்பார்.

24.03.2009 அன்று காலை 5 மணி. புதுமாத்தளன் நீர்ப்பரப்பினை தாண்டி படையினரின் நிலைகளில் இருந்து ஏவப்பட்ட ஆர்.பி.ஜி உந்துகணை ஒன்று வைத்தியசாலையின் பின்புறத்தில் வசித்த பெண் ஒருவரின் காலைத் துளைத்துக்கொண்டு வெடிக்காத நிலையில் இருந்துள்ளது.

யுத்த காலத்தில் வெளியான நிழற்படங்களில் இதைப் பார்த்திருப்பீர்கள். சத்தம் கேட்கும் திசையை நோக்கி ஓடிச்சென்ற சகிலா அக்காவும் வைத்தியசாலைப் பணியாளர்களும் வெடிக்காத நிலையில் இருந்த உந்துகணையோடு காயமடைந்த பெண்ணை வைத்தியசாலைக்குக் கொண்டு வந்திருந்தனர்.

இது எவ்வளவு பெரிய சவால் ஆபத்து நிறைந்தது என்று அனைவருக்கும் தெரியும். அன்று அந்த உந்துகணை வெடித்திருந்தால் வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட பலர் இறந்திருப்பார்கள்

“அக்கா நீங்கள் எப்படி பயமில்லாமல் அதில நிண்டீங்கள்? “ என்று கேட்க! “உனக்கு தெரியாதாடா, நான் விடியப்பறமே எழும்பிடுவன். பகலில் சனம் என்று, அதில ஒரு கிணற்றடியில குளிக்கபோறனான். வழமையாக வெள்ளனவே நான் வைத்தியசாலைக்கு போடுவன்.

அன்றும் அப்படிதான் போனன். நான் பயப்பிடேல. எப்படியாவது அந்தப்பிள்ளையைத் தூக்கிகொண்டு வரவேணும் என்று, அதில் கிடந்த துணியில கிடத்தித்தான் தூக்கிகொண்டு வந்தது. ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தவுடன் அதில் இருந்த எல்லாரும் ஓடிட்டினம்.

யாரோ ஒரு இயக்க டொக்ரராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்ரரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா” இன்றும்
அதே வழமையான பாணியில் எல்லாரையும் அன்பாகக் கேட்டார். சகிலா அக்கா ஊடகத்துறையினை விட்டு விலகியிருந்தாலும் அவர் நிச்சயம் மதிக்கப்படவேண்டிய ஒருவர்.

இணையங்களில் நீங்கள் பார்க்கின்ற இறுதி யுத்தகால புகைப்படங்கள் பலவற்றினை அவரே எடுத்திருந்தார். பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை (பொக்கணை என்று அழைப்பார்கள்), வலைஞர்மடம், களுவாவாடி, இரட்டைவாய்க்கால், தனிப்பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு, வட்டுவாகல் மேற்கு ஆகிய இடங்களிலேயே இறுதி யுத்தம் மூண்டிருந்தது.

இராணுவம் கைப்பற்றிய இடங்கள் இறுதி நாட்களில் வட்டுவாகல் மேற்குப் பகுதியில்தான் அதிகளவு மக்கள் ஒதுங்கியிருந்தனர். இவ்வாறு இறுதி யுத்தம் நடந்த பகுதிகளை நான் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கின்றேன்.

. 01) பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை.
02) வலைஞர்மடம், களுவாவாடி, இரட்டைவாய்கால்.
03) தனிப்பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு.
04) வட்டுவாகல் மேற்கு (இப்பிரதேசங்களில் முதல் பிரிவில் உள்ள பிரதேசங்கள்)

இந்தப் பகுதிகள் 2009, ஏப்ரல் 20, 21 ஆகிய திகதிகளில் படையினரின்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டன.

அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் படையினரின் பகுதிக்கு சென்று விட்டார்கள். இதில் அம்பலவன்பொக்கணைப் பகுதியிலேயே சகிலா அக்காவும் அவரது தாயாரும் வசித்து வந்திருந்தனர். சிறிலங்கா படையினர் அம்பலவன் பொக்கணையை அண்மித்துக்கொண்டு இருக்கும் பொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் காவலரண்கள் வலைஞர்மடம் பகுதியினை அண்மித்து அமைக்கப்பட்டிருந்தது.

வலைஞர்மடத்தினை தாண்டி முள்ளிவாய்க்காலுக்கு எவரும் அன்றையநாளில் வரமுடியாதநிலை, அம்பலவண்பொக்கணையில் இருந்த பெரும்பாலானவர்கள் படையினரின் பக்கமும் முள்ளிவாய்க்கால் பக்கமும் முதல்நாளே சென்று விட்டனர். அதற்குள் அகப்பட்டிருந்த சகிலா அக்காவும் தாயாரும் உண்மையிலே படையினரின் பக்கமே சென்றிருக்கவேண்டும்.

முள்ளிவாய்க்கால் செல்வதற்கு வழியேதும் இல்லை. அங்கே செல்வதென்றால் விடுதலைப்புலிகளின் காவலரண்களைத் தாண்டித்தான் செல்லவேண்டும். அது கடினமான காரியம். அந்த ஆபத்தான நேரத்தில்தான் தற்துணிவோடு வலைஞர்மடம் கடற்பகுதிக்கு சென்று, கடலுக்குள் இறங்கி, இடுப்பளவு தண்ணீருக்கு ஊடாகத் தனது தயாரையும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச்சென்றார் சசிகலா அக்கா.

சகிலா அக்கா ஊடகப்பணி மீது வைத்த அதீத அக்கறை தான் காரணம். யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் ஆபத்தான சூழல், உணவுத்தட்டுப்பாடு, வயதான பெற்றோர்களைப் பராமரிப்பதில் சிரமம், குழந்தைப் பிள்ளைகளுக்கான உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு, காயமடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் காயமடைகின்ற அவலம் – இவ்வாறானதொரு நெருக்கடிநிலை உருவாகவே, அப்பகுதியில் பணியாற்றிய ஊடகவியலாளர்கள், ஊடகப்பணியாளர்கள் பலர் படையினர் பக்கம் சென்றிருந்தனர்.

ஆயினும் தனக்கு சந்தர்ப்பம் கிடைத்தும், படையினரின் பக்கம் செல்லாமல் யுத்தத்தின் இறுதிநாள் வரைக்கும் ஊடகப் பணியாற்றியிருந்தார் சசிகலா அக்கா. இன்று வரைக்கும் அனைவரும் இறுதி யுத்தகால படங்களைப் பார்க்கின்றீர்கள் என்றால் அதற்கு சகிலா அக்காவின் உழைப்பும் அதில் நிறையவே இருக்கின்றது. (சகிலா அக்கா பற்றிய விரிவான பகுதி நூலில் வெளிவரும்)

சுரேன் கார்த்திகேசு

Leave a comment