மத்திய வங்கியில் கொள்ளையிட்டதைப் போல தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சமுர்த்தி வங்கியிலும் கொள்ளையிட முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய வங்கியின் கீழ் சமுர்த்தி வங்கியை கொண்டுவரவுள்ளதாக கொழும்பில் கடந்த 6 ஆம் திகதி இடம்பெற்ற மே தின கூட்டத்தில் பிரதமர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு குற்றம் சாட்டினார்.
மேலும், “கடந்த காலங்களில் பிரதமர் மத்திய வங்கியினை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தமை காரணமாகவே பாரிய மோசடி ஒன்று இடம்பெற்றது. அதே போன்ற மோசடிக்கு தற்போது இடமளிக்க முடியாது.
பிரதமரின் இந்த முயற்சிக்கு சமுர்த்தி பயனாளிகளும், மக்களும் ஒன்றிணைந்து எதிர்ப்பினை தெரிவித்து அவருடைய இந்த முயற்சியை தோற்கடிக்க வேண்டும் ” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.