“நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது”!

361 0

இன்று யாழ்.நோக்கி சென்ற ரயிலில், ரயில்வே திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தமிழ் பெண்ணொருவருடன் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்ட சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா ரயில் நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த ரயிலில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட ரயிலில் பணியாற்றுகின்ற சீட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார்.

இதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது, தட்டி கேட்டவர்களை தாக்க முயற்சித்ததோடு, தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் என்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசியுள்ளார்.

இதன் போது அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் குறித்த ஊழியர் தாக்க முயற்சித்தார். இந்த சம்பவம் சாவகச்சேரி ரயில் நிலையத்தை அண்மித்த போது நடந்துள்ளது.

இதன் போது, “நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது”, “பொலிசாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது”, “இங்கு நான் தான் பெரியவன்” என்று மிரட்டும் தொனியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது குறித்த ரயிலில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை. இதனால் பயணித்த அனைவரும் பயத்தில் உறைந்திருந்துள்ளார்கள்.

குறித்த ரயிலானது  யாழ்.பிரதான ரயில் நிலையத்தை வந்ததடைந்ததும், சம்பவம் தொடர்பில் யாழ்.ரயில் அதிபருக்கு குறித்த பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொளியும் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் தான் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை செய்வதாக யாழ்.ரயில் அதிபர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a comment