சிறி லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் பொதுச் செயலாளர்கள் உட்பட கட்சிகளின் இதர பதவிகளில் அதிரடி மாற்றங்களைச் செய்ய இறுதி முடிவெடுக்கப்பட்டுள் ளது எனவும், எதிர்வரும் வாரம் இந்த மாற்றங்கள் இடம்பெறவுள்ளன எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுக்கும் வகையிலும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி அதிருப்தியாளர்களைச் சமாளிக்கும் நோக்கிலும் இந்த மாற்றங்களை உடனடியாகச் செய்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆகியவற்றின் தலைவரான மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.
இந்த மாற்றத்தின்படி சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி எஸ்.பி.திஸாநாயக்கவுக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலர் பதவி சுசில் பிரேமஜயந்தவுக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவர்கள் இருவரும் மகிந்த அணியால் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர் என்பதுடன், தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்துவிட்டு தேசிய அரசிலிருந்து வெளியேறி எதிரணி வரிசையில் சுயாதீனமாகச் செயற்படத் தீர்மானித்துள்ள சு.கவின் 16 பேர் கொண்ட அணியில் அங்கம் வகிக்கின்றனர்.
அதேவேளை, சுசில் பிரேமஜயந்த, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பதவியில் முன்னர் இருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
இவர்களுக்கு எதிராக சு.கவின் அதிருப்தியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்தநிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாணியில் சு.க. மற்றும் ஐ.ம.சு.முவை முழுமையாக மறுசீரமைக்க அரச தலைவர் மைத்திரி தீர்மானித்துள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.