சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் ஆயுதங்களை குவிக்கும் சீனா

7886 0

சர்ச்சைக்குரிய தென் சீனக்கடலில் ஆயுதங்கள் குவிப்பில் சீனா ஈடுபட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. 

தென்சீனக் கடலின் அடிப்பகுதியில் பெருமளவு எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த தென்சீனக்கடல் பகுதியை சீனாவுடன், வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், புருனே உள்ளிட்ட நாடுகளும் உரிமை கொண்டாடுகின்றன. ஆனால் சீனா, அங்கு சர்ச்சைக்குரிய பகுதியில் செயற்கை தீவுகளை உருவாக்கி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

தென்சீனக் கடல் பகுதி முழுவதும் தங்களுடையதுதான் என சீனா தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய பகுதியில் சீனா திடீரென ஆயுதகுவிப்பில் ஈடுபட்டுள்ளது. தென் சீன கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் சீனா நில இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைத் தளவாடங்களையும், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளையும் நிலை நிறுத்தியிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த 30 நாள்களுக்குள் இந்த ஏவுகணைகள் அடங்கிய கப்பல்கள் ஃபியரி கிராஸ் ரீஃப், சுபி ரீஃப் மற்றும் மிச்சிப் ரீஃப் ஆகிய தீவுகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. தற்போது, அந்த செய்திகளை வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளது. தென்சீனக் கடல் சர்வதேச கடல் பகுதி எனவே அங்கு பல நாடுகளின் கப்பல்கள் சுதந்திரமாக சென்று வர உரிமை உள்ளது என அமெரிக்க தெரிவித்து வருகிறது. அமெரிக்க கப்பல்களும் அந்த வழியாகத்தான் சென்று வருகின்றன. இந்த நிலையிலும், சீனா அங்கு போர் பயிற்சியில் ஈடுபட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.

தென் சீனக் கடலில் ஆயுதக் குவிப்பு குறித்து சீன வெளியுறவுத்துறைத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறுகையில், “ ஸ்பார்ட்லி தீவுகள் என்றழைக்கப்படும் நன்ஷா பகுதி மற்றும் அதனைசுற்றியுள்ள தீவுகள் அனைத்தும் சீனாவுக்கு சொந்தமானது. எனவேதான், ஆயுத தளவாடங்களை சீனா அங்கே குவித்துள்ளது. தென் சீன கடல் பகுதியில் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நிலைநாட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது எங்களின் உரிமை. எனவே, இதனை யாரும் கேள்வி கேட்க முடியாது” என தெரிவித்தார்.

Leave a comment