புகை பிரச்சனையால் மும்பையில் அவசரமாக தரையிறங்கிய துபாய் விமானம்

231 0

மும்பையிலிருந்து துபாய் சென்ற இண்டிகோ விமானத்தின் கேபினில் புகை வெளிவந்ததாக வந்த தகவலையடுத்து மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 

மும்பையில் இருந்து துபாய் நகருக்கு நேற்று இரவு 8:15 மணியளவில் இண்டிகோ விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று 176 பயணிகள், இரண்டு குழந்தைகள் மற்றும் ஆறு விமான சிப்பந்திகளுடன் புறப்பட்டது. அந்த விமானம் வானில் பறந்து கொண்டிருந்த போது சரக்கு கேபினில் இருந்து புகை வெளிப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த விமான மும்பை நகருக்கு திரும்பியது. மும்பை விமான நிலையத்தில் 9:15 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். விமான நிலையத்தில், என்ஜினியர்கள் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு கோளாறு ஏற்பட்டதற்கான எந்த அடையாளமும் இல்லை.
இதையடுத்து பயணிகளுக்கு வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அனைவரும் பயணம் செய்தனர்.

Leave a comment