வவுனியாவில் 32 சுகாதாரமற்ற வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

228 0

அகில இலங்கை ரீதியாக செயல்படுத்தப்பட்டுவரும் உணவுப் பாதுகாப்பு வாரம் 2018 வவுனியாவில் கடந்த 16-ஆம் திகதியிலிருந்து 22-ஆம் திகதிவரை செயல்படுத்தப்பட்டுள்ளது. இச் செயற்பாடு வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ். லவன் தலைமையில், பொது சுகாதாரப்பரிசோதகர் க. தியாகலிங்கத்தின் நெறிப்படுத்தலில் உணவகங்கள், வெதுப்பகங்கள், வியாபார வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டனர்.

இப்பரிசோதனை நடவடிக்கைகளில் எட்டு பொது சுகாதாரப்பரிசோதகர்கள் இரு வாகனங்களில் அதிகாலை 4-மணி தொடக்கம் இரவு 9-மணிவரையான காலப்பகுதிகளில் இத்திடீர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேற்பார்வை பொதுப்பரிசோதகர் க. தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கும்போது., இந்நடவடிக்கையின்போது, 19 உணவகங்கள், 6 பொதுப்பகங்கள், 3 சுப்பர் மார்க்கட்கள், 29 பலசரக்கு வர்த்தக வியாபார நிலையங்கள், 28 வீதியோர வியாபார நிலையங்கள் என்பன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சுகாதார நலத்திற்கு ஒவ்வாத நிலையின் கீழ் உணவுகள் தயாரித்தமைக்காக 16 நீதிமன்ற வழக்குகளும், இறந்த எலியின் உடலுடனும் எலி எச்சத்துடனும் உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமைக்காக 3 நீதிமன்ற வழக்குகளும், பூச்சி மொய்த்த பூஞ்ஞனம் பிடித்த நிலையில் உணவுகளை வைத்திருந்தமைக்காக 4 நீதிமன்ற வழக்குகளும், காலாவதியான முடிவடைந்த உணவுப் பொருட்களை விற்பனைக்காக வெளிக்காட்டி வைத்திருந்தமைக்காக 9 நீதிமன்ற வழக்குகளும், வவுனியா நீதவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தினால் 159000 ரூபா தண்டம் அறவிடப்பட்டன.

இக்காலப்பகுதியில் மொத்தமாக 1597 உணவுகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்றக்கட்டளையின் பின்னர் அவை அழிக்கப்பட்டன.

அத்துடன் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் அங்குள்ள பணியாளர்களுக்கும் என இரு சுகாதாரக்கருத்தரங்குகளும் பொது சுகாதாரப்பரிசோதகர்களினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துரைகளையும் வழங்கியிருந்தனர் என்று மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment