4 பாகிஸ்தான் வீரர்களை சுட்டுக்கொன்றது இந்திய ராணுவம்

244 0

காஷ்மீர் எல்லையில் நடந்த சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த 4 வீரர்களை இந்திய ராணுவம் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜம்மு காஷ்மீரின் எல்லையோரத்தில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் சிறிய ரக மோர்ட்டார் குண்டுகள் மூலம் இந்திய நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதுதவிர சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் மூலமாகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்தினர்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமைந்துள்ள திக்வார் பகுதியில் இந்த தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்தனர்.

இந்த சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று நிலைகளை இந்திய ராணுவம் தகர்த்ததாகவும், பாகிஸ்தான் தரப்பில் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment