மாபெரும் இளைஞர் மாநாட்டிற்கு தயாராகும் தமிழ் மக்கள் பேரவை!! யாழில் பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு!!

359 0

தமிழ்மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் யூன் மாதமளவில் இளைஞர் மாநாடு நடத்துவதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தமிழ் மக்கள் பேரவை மாநாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

தமிழர் தாயகத்தின் முன்னேற்றத் தகும் அபிவிருத்தியில் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றுதலை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்ப்பட்டுள்ளதாகவும் அந்தக் குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவையின் மாநாட்டுக் குழு இன்று(23) இரவு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்மக்கள் பேரவையின் செயற்பாட்டுக் குழுவினால் இதற்காகத் தனியான மாநாட்டு குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த குழுவில் மதிப்புக்குரிய சின்மய மிஷன் சுவாமிகள், அருட்தந்தை ரவிச்சந்திரன் அடிகளார், ஓய்வுநிலை அதிபர் அருந்தவபாலன், திருமதி அனந்தி சசிதரன், கலாநிதி சரவணபவன், தவரூபன் மற்றும் கேசவன் ஆகியோர்கள் நியமிக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டுக்கான ஆரம்ப கலந்துரையாடல் தமிழ்மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியகலாநிதி லக்ஸ்மன் தலைமையில் கடந்த 17.04.2018 அன்று நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பேராசிரியர் சிவநாதன் , பேராசிரியர் சிற்றம்பலம், மதிப்புக்குரிய சின்மய மிஷன் சுவாமிகள், அருட்தந்தை ரவிச்சந்திரன் அடிகளார், ஓய்வுநிலை அதிபர் அருந்தவபாலன், திருமதி அனந்தி சசிதரன், கலாநிதி சரவணபவன், தவரூபன் மற்றும் திரு கேசவன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

பிரதேச ரீதியாக இளைஞர், யுவதிகளை பங்குபற்றச் செய்வதற்கு மேற்கொள்ளக்கூடிய அனைத்து வழிவகைகளும் இதன் போது ஆராயப்பட்டன.வடமாகாணத்தில் இருக்கக்கூடிய அனைத்து இளைஞர் மற்றும் யுவதிகள் சார் கழகங்கள் அமைப்புக்கள் போன்றவற்றுடன் இணைந்து பெரிய அளவில் இந்த மாநாடு நாடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போருக்குப்பின்னரான எமது சமுதாயத்தில் இளைஞர், யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், சவால்கள் பிரதேச அபிவிருத்தியில் அவர்களது அர்ப்பணிப்புடனான பங்களிப்பினை கண்டறிவதும் அடையாளப்படுத்துவதும் இந்த மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.

இவை தவிர சர்வதேச நியமங்களுக்கு ஏற்ப எமது வாழ்வுரிமையை நிலைநாட்டுதல், ஒழுக்க விழுமியம் மிக்க ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை கட்டியெழுப்புதல், இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தல் மற்றும் போருக்கு பின்னரான அபிவிருத்தியில், சூழலில், இளைஞர் யுவதிகளின் சவால்கள் பிரச்சினைகளை அடையாளம் காணுதலும் அபிவிருத்தியில் அவர்களது பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதலும் ஆகும் என குறித்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment