முன்னாள் போராளி குடும்பங்களை இலக்கு வைத்த ஆவா குழு உறுப்பினர்?

322 0

பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கொடிகாமம் தவசிகுளத்தைச் சேர்ந்த குற்றவாளியான ஆவா றமணன் என அழைக்கப்படும் சகாயநாதன் விஜிதரன் என்பவர் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் நிலையில் தன்னை இனந்தெரியாதவர்கள் கடத்தியுள்ளதாக தனது குடும்பத்தினர் மூலம் நாடகமாடி தலைமறைவாகியுள்ளார்.

தான் தலைமறைவாகி நாட்கள் கடந்த நிலையில் தம்மை யாரும் நெருங்கமுடியாது எனவும் தமக்கு இராணுவ செல்வாக்கிருப்பதாகவும் பொலிஸார் தம்மை எதுவும் செய்யமுடியாது எனவும் சவால் விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உறுப்பினராகவிருந்த முன்னாள் போராளிகளது குடும்பங்களை இலக்கு வைத்தே தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் போராளிகளது குடும்பங்களில் உள்ளவர்களைக் கடத்துதல், அவர்களது குடும்பங்களில் கொள்ளையில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் தாம் ஈடுபட்டு வருவதால் தமக்கு இராணுவத்தினரது பூரண ஆதரவு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

போராட்ட காலத்தில் இராணுவத்தினருக்குக் காட்டிக்கொடுத்தல், கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இவர்கள் தற்போதைய சூழ்நிலையில் அவர்களது மறைமுக ஒத்துழைப்புடன் குழுவாகச் செயற்பட்டு இப்படியான சமூகவிரோத குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவதாகக் கூறி விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் சகாயநாதன் விஜிதரனும் இவரது குழுவினரும் மன்னார், மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் குழுவாகத் தங்கி நின்று மேசன் வேலை, தச்சு வேலை போன்றவற்றில் பகலில் ஈடுபட்டு நோட்டமிட்டு இரவில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் பெண்கள் பலரை ஏமாற்றிக் கூட்டிச் சென்று துஸ்பிரயேதகம் செய்து பணம் பறித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

மற்றும் இக்குற்றச் செயல்களில் குழுவாக இணைந்து ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மேற்படி குற்றவாளி சகாயநாதன் விஜிதரனை கொடிகாமம் தவசிகுளம் என்னும் முகவரியிலுள்ள இவரது வீட்டிற்குப் பொலிசார் தேடிச் சென்றபோது தனது மகனை யாரோ கடத்தியுள்ளதாகக் குடும்ப உறவினர்களால் கூறப்பட்டுள்ளது.

அது பொய் எனவும் குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தலைமறைவாகியுள்ளார் எனவும் கூறப்பட்ட வேளை தமக்கு எதுவும் தெரியாது எனவும் தாமும் அவரைத் தேடிவருவதாகவும் கூறியுள்ளனர்.

மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபட்ட நிலையில் குற்றவாளியாக இனங்காணப்பட்டுப் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நிலையில் அவரது குழுவினர் சிலருடன் மட்டக்களப்புக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும் மற்றும் மன்னார், கச்சாய், திருகோணமலை, கொழும்பு போன்ற இடங்களில் மாறி மாறி ஒழிந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இப்படியான சமூகவிரோதக் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் பலர் தற்போது சுதந்திரமாக நடமாடிப் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இப்படியானவர்கள் பலர் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடங்களையும், மக்களையும் இலக்கு வைத்துச் செயற்பட்டு வருவதுடன் மேற்படி குற்றச் செயலில் ஈடுபட்ட நபரின் கூற்றுப்படி தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி தற்போது பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளாது முன்னாள் போராளிகளது குடும்பங்களை இராணுவத்துணையுடன் இலக்கு வைத்துச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளது ஆட்சிக் காலத்தில் இப்படியான குற்றவாளிகள் இனங்காணப்பட்டு குற்றவாளிகளுக்கு மக்கள் மத்தியில் உரிய தண்டனைகள் வழங்கப்பட்டுவந்தமையால் நாட்டில் இப்படியான குற்றச் செயல்கள் இடம்பெறுவதற்குக் குற்றவாளிகள் உருவெடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a comment