சுபிக்‌ஷா சுப்பிரமணியனுக்கு ஜாமீன் வழங்க முடியாது- ஐகோர்ட்டு

406 0

கடன் மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுபிக்‌ஷா சுப்பிரமணியத்தை ஜாமீனில் விடுவிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

குஜராத், டெல்லி, மராட்டியம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் ‘சுபிக்‌ஷா’ என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சுப்பிரமணியன் என்பவர் உள்ளார்.

இவர், விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் விஸ்வபிரியா பைனான்ஸ் செக்யூரிட்டி என்ற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்தினார். இந்த நிறுவனங்களின் பெயரில், பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.150 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்காக வங்கிகளில் சுமார் ரூ.700 கோடி கடன் வாங்கி மோசடி செய்தாக சுப்பிரமணியன் மீது, மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கடந்த பிப்ரவரி மாதம் அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சுப்பிரமணியன், சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி சுபாதேவி விசாரித்து, ஜாமீன் வழங்க மறுத்து கடந்த மாதம் உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு சுபிக்‌ஷா சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. இவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. வழங்கினால், அவருக்கு எதிரான புலன் விசாரணை பாதிக்கப்படும். சாட்சிகளை கலைத்து விடுவார் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சுபிக்‌ஷா சுப்பிரமணியத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Leave a comment