இளைஞர் யுவதிகள் அரச உத்தியோகம் தொடர்பில் கனவுகாணும் நிலையில் இருந்து மாற்றம்பெறவேண்டும் என மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி தெரிவித்தார்.மட்டக்களப்பு,மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பில் உள்ள விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய பாடநெறிக்கான மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.
சமூக நலன்புரி அமைப்பின் தலைவர் எஸ்.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கனடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவகத்தின் பதில் வதிவிட பிரதிநிதி டீப்திலமாஹேவா,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி,,கனடிய உலக பல்கலைக்கழக சேவை நிறுவகத்தின் கிழக்கு பிராந்திய இணைப்பாளர் கே.யோகேஸ்வரன்,மட்டக்களப்பு மாவட்ட கணிணி மற்றும் காட்சிப்படுத்தல் தொழில்நுட்பவியல் தொழில்நுட்பவியலாளர்கள் அமைப்பின் தலைவர் வி.ஆர்.மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இளைஞர் யுவதிகளின் தொழில்வாய்ப்பினை கருத்தில்கொண்டு விவேகானந்தா தொழில்நுட்ப கல்லூரியில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கணிணி வரையியல் வடிவமைப்பாளர் தொழிற்பயிற்சிக்கு உள்ளீர்க்கப்பட்டுள்ள 26 மாணவர்களுக்கு இதன்போது வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது தொழில்களை எதிர்பார்த்து காத்திருக்கும் இளைஞர் யுவதிகள் தொழில்வாய்ப்பினைபெற்றுக்கொள்ளும் வகையில் எதிர்காலத்தில் முன்னெடுக்கவேண்டிய வழிமுறைகள் குறித்த இங்கு கருத்துகள் முன்வைக்கப்பட்;டன.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர்,
இன்று பல இளைஞர் யுவதிகள் அரசாங்க உத்தியோகம் என்னும் கனவில் இருந்துகொண்டுள்ளனர்.இதன் காரணமாக அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது.
நல்ல தொழில் கல்வியை கற்று சிறந்த தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ளும் சூழல் இருக்கின்றபோதிலும் அவற்றினை நோக்கி எமது இளைஞர் யுவதிகள் செல்வது மிகவும் குறைவாகவே உள்ளது.
பல இளைஞர் யுவதிகள் வெளிநாட்டு தொழில் மோகத்தில்செல்லும்போதும் தொழில்தகைமையில்லாமல்செல்வதன் காரணமாக அங்கு சாதாரண தொழிலாளியாகவே கடமையாற்றும் சூழ்நிலை ஏற்படுகின்றது.
எனவே கல்வியை பூர்த்திசெய்த இளைஞர்கள் சிறந்த தொழில்தகைமைகொண்ட கல்வி தெரிவுசெய்து கற்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்த தொழில்வாய்ப்புகளைப்பெற்றுக்கொள்ளமுடியும் என்பதுடன் அவர்களின் வாழ்க்கையும் சிறப்பான முறையில் அமையும் .அதற்கான ஊக்குவிப்புகளை பெற்றோர் வழங்கவேண்டும்.என்றார்.